அரசாங்கம் எங்களை வேதனைப்படுத்துகிறது - காணாமலாக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு - Yarl Voice அரசாங்கம் எங்களை வேதனைப்படுத்துகிறது - காணாமலாக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு - Yarl Voice

அரசாங்கம் எங்களை வேதனைப்படுத்துகிறது - காணாமலாக்கப்பட்ட உறவுகள் குற்றச்சாட்டு

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரிக்கை கேலி கூத்தாக இருக்க முடியாது. அதற்காகவே நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணையினை நாங்கள் கோருகிறோம். என நீதிக்கும் சமாதானத்திற்குமான ஆணைக்குழுவின் அருட்தந்தை வி.பி.மங்களநேசன் அடிகளார் கூறியிருக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது மேலும் அவர் கூறுகையில்
கடந்த 3 வருடங்களாக 8 மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்  நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மண்ணுக்குள் தோண்டி எடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டில் உள்ளார்கள் எனவும், இறந்துவிட்டார்கள் எனவும் அரசாங்க தரப்பினர்கள் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

எவரிடம் ஒப்படைத்தோம், எந்த இடத்தில் ஒப்படைத்தோம், எப்போது ஒப்படைத்தோம் என கூறுவதற்கு சாட்சிகள் உள்ள நிலையில் நீதி கோரி தொட்ந்தும் போராட்டம் நடாத்துவோம். ஆனால் உள்ளக விசாரணை ஊடாக எமக்கு தீர்வு வழங்கப்படாது. அதில் நாம் மிக தெளிவாக இருக்கிறோம். உள்ளக விசாரணை மீது நமக்கு நம்பிக்கை இல்லாமைக்கு நிறையவே அனுபவங்கள் உள்ளன.

குறிப்பாக திருகோணமலை 5 மாணவர்கள் கொலை, கொழும்பில் 11 பேர் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களில் உள்ளக விசாரணை ஊடாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதனை சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேலி கூத்தாக இருக்க முடியாது. எனவே எமக்கு சர்வதேச விசாரணை ஊடாக எமக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதன் ஊடாக இந்த நாட்டில் நல்லிணக்கம் சாத்தியமாகும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post