இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது எனவும் நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவையாகவுள்ள அதேவேளை முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை என இ.சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்.....
பொது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்கும் சக்தியாக உருவாகுவோம். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றோம்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த எமது வேட்பாளர்கள் யாழ்ப்பாண மக்களுக்காக குரல் கொடுக்க கூடியவர்கள். மற்ற கட்சிகள் போன்று பணத்திற்காகவும் , பதவிக்காகவும் போட்டியிடவில்லை. தொண்டர் அடிப்படையில் மக்களுக்காக சேவை செய்ய கூடியவர்கள்.
கொரோனோ பாதிப்பு இன்னமும் நீங்கவில்லை. 46 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் இன்று கல்வி நடவடிக்கை இல்லாமல் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இவர்கள் தவிர தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் என பலரும் வருமானங்களை இழந்து நிர்கதியாகி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனோவால் மக்கள் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நேரத்தில் சுகாதார துறையினர், வைத்தியர்கள் , தாதியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆனால் இந்த அரசாங்கம் கொரோனோவை காரணமாக வைத்து மக்களை மிக மோசமாக வதைக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிக கொடூரமானதாக இருக்கும்.
அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை. அதேவேளை முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவை.
கொரோனோக்கு முதல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் 1ஆம் திகதி 1000 ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்றார்கள் , விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்கள். அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லை இவ்வாறாக வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
ஆனால் நாட்டினை கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர். 13 ரில்லியன் கடன் உள்ளது. ஆனால் நாட்டின் சொத்து மதிப்பு 1.6 ரில்லியனே. அப்படியாயின் மிச்சமெல்லாம் தண்ணியில் அடித்து செல்லப்பட்டுள்ளனவா?
பிறக்க போற பிள்ளைகளே 6 இலட்ச கடன்கார பிள்ளையாகவே பிறக்கின்றது. ஆனால் ஆள்பவர்கள் தங்களை குபரேன்களாக ஆக்கிக்கொண்டனர்.
இதனால் தான் நாட்டில் ஏதாவது , அசம்பாவீதம் நடந்தால் பாராளுமன்றில் நடக்காதா என மக்கள் அங்கலாய்கின்றனர்.
நாட்டில் குண்டு வெடித்த போது , பாராளுமன்றில் வெடிக்கலையே , கொரோனோ வந்த போது பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு வரவில்லையே , வெள்ள பெருக்கு வந்த போது பாராளுமன்றை அடித்து செல்ல வில்லையே என மக்கள் அங்கலாய்கின்றனர்.
நாடாளுமன்றில் உள்ளவர்களில் 100 பேருக்கு மதுபான சாலைக்கான அனுமதி பெற்றுள்ளனர், எதனோல் வியாபரிகள் இருக்கின்றர்கள். இவ்வாறு அவர்கள் இருப்பதனால் மக்கள் அவ்வாறு அங்கலாய்வதில் தவறில்லை.
நாட்டில் தொடர்ந்து மேட்டுக்குடியினரே நாட்டை ஆண்டுவருகின்றனர். அவர்களுக்கு மக்களின் வறுமை , கஷ்டங்களை புரிந்து கொள்ளப்போவதில்லை. எம்மை தொடர்ந்து வஞ்சித்தே வருகின்றனர்.
இதனால் தான் நாட்டில் இருந்து இளையோர் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சுயநிர்ணய உரிமைக்காக போராடியவர்கள் இன்று உரிமைகளை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுயத்தை இழந்து நிற்கிறோம்.
ராஜபக்சேக்கள் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யப்போவதில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்தை தொடர்ந்து வளர்க்கவே முயல்வார்கள். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு ராஜபக்சேக்களை புறக்கணிக்க வேண்டும்.
தாமே தேச பற்றாளர்கள் என கூறும் ராஜபக்சேக்கள் இன்று 3 ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என்பவரை வெளியே விட்டுள்ளார்கள். ஆனால் பல அரசியல் கைதிகளை விடுவிக்க தயாராகவில்லை.
3ஆயிரம் இராணுவத்தை கொன்றேன் என கருணா கூறியதை போல வேறு ஒருவர் கூறியிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று சிந்தித்துக்கொள்ளுங்கள்.
கிழக்கு செயலணி கூட சிங்கள மக்களை இனவாத ஊட்டி அவர்களை உசுப்புவதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவே அமைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
Post a Comment