மாதகலில் கடற்படையினர் அடாவடி - சுரேஸ் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice மாதகலில் கடற்படையினர் அடாவடி - சுரேஸ் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

மாதகலில் கடற்படையினர் அடாவடி - சுரேஸ் விடுத்துள்ள வேண்டுகோள்


மாதகல் துறைமுக விநாயகர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் உப தலைவராக இருப்பவர். திர செல்லத்துரை தவரட்ணம் அவர்கள். இவர் பல படகுகளை வைத்து பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துவரும் ஒரு சம்மாட்டியாகவும் இருக்கின்றார்.
மாதகல் துறைமுகத்தில் இவருக்கான 5 பரப்பு உறுதிக்காணி இருக்கின்றது. இதில் சில காலமாக கடற்படையினர் தங்களுக்கென ஒரு காப்பரண் ஒன்றை அமைத்து அதில் தங்கி வருகின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மிகுதியாக உள்ள காணியில் இவர் ஒரு ஐஸ் கட்டி தொழிற்சாலை அமைக்க அனுமதி அளிக்க மறுத்தது மாத்திரமல்லாமல் இவரை தனது சொந்த இடத்தில் இருந்து விரட்டுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றார்கள்.
கடந்த காலத்தில் கடற்படையினர் அந்த நிலத்தை அபகரிப்பதற்காக முயற்சித்த பொழுது பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அதனை முறியடித்திருந்தோம். இப்பொழுது பல்வேறுபட்ட அழுத்தங்களை பிரயோகித்து தவரட்ணம் அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டுவதற்கு கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையின் காவலரணுக்கு முன்பாக இருந்து புறப்படத் தயாராகும் இவரது படகுகள் கடற்படையினால் தடுத்து நிறுத்தப்பட்டு வலைகள் அனைத்தும் வெளியே போடப்பட்டு அடிக்கடி சோதனைக்குள்ளாக்கப்படுகின்றது. இதனால் பலநாட்கள் கடற்றொழிலுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களது காவலரணில் இருந்து வரும் கழிவு நீர் துர்நாற்றத்தை வீசுவதாகவும் கடற்றொழிலாளர்களுக்கு சுகாதார சீர்கேடுகளை செய்வதாகவும் இருக்கின்றது. இந்த துர்நாற்றம் காரணமாக கடற்றொழிலாளருக்காகக் கட்டப்பட்ட ஓய்வு விடுதியில் யாரும் தங்க முடியாமல் உள்ளது. ஆகவே, இவ்வாறான நெருக்குவாரங்களை கொடுப்பதனூடாக அவரது சொந்த நிலத்தில் இருந்து அவரை அப்புறப்படுத்துவதற்காகவே கடற்படை முயற்சிப்பதாகத் தோன்றுகின்றது.
அவரது சொந்தக் காணியை கடற்படை கையளிக்கும் பட்சத்தில் அவர் அந்த இடத்தில் அவர் ஒரு ஐஸ் கட்டித் தொழிற்சாலையை உருவாக்கத் கூடியதாக இருக்கும் அது பலருக்கு வேலைவாய்ப்பைக் கொடுப்பதாக இருக்கும். கடற்படையினர் அவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் காணிகளை ஒப்படைப்பதன் மூலம் ஒரு சுமூக வாழ்க்கையை உருவாக்குவதற்கு கடற்படை ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டுகின்றேன்.

சுரேஷ் பிறேமச்சந்திரன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
உபதலைவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

0/Post a Comment/Comments

Previous Post Next Post