தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - சுவிஸ் தூதுவரிடம் விக்கி முறையீடு - Yarl Voice தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - சுவிஸ் தூதுவரிடம் விக்கி முறையீடு - Yarl Voice

தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி - சுவிஸ் தூதுவரிடம் விக்கி முறையீடு

சுவிஸ் வெளிநாட்டுத் தூதுவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார்.
 கன்ஸ்பீட்டர் மொக் மற்றும் சிடோர்னியா கேபிறியல் (அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பானவர்) ஆகியோர் முன்னைய வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று சந்தித்தனர். 

தற்போதைய கள நிலை பற்றி அறிந்துகொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். கள விபரம் பற்றி நீதியரசர் கூறுகையில் கிராம சேவகர்களுடன் மூன்று இராணுவ வீரர்களையுஞ் சேர்த்து அவர்கள் ஒவ்வொருவரும் பணிபுரிய வேண்டியிருப்பது வருங்காலத்தில் குடியியல் விடயங்களையும் இராணுவத்தினரே செய்வார்களோ என்று யோசிக்க வைத்துள்ளது. 

யு9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களைப் பயப்படுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைப்பதற்கோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது. 

பின்னர் மக்கள் போகாதது கொரோனாவிற்குப் பயந்தே என்று அவர்கள் கூறலாம். அத்துடன் பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் என்று நீதியரசர் சுட்டிக் காட்டினார். 

இம் முறை 5ந் திகதி தேர்தல் நடத்தி 6ம் திகதியே வாக்கெண்ணுதல் நடைபெறவிருக்கின்றது. இரு நாட்களுக்கும் இடையில் இரவிலே பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சந்தேக நிலை எழுந்துள்ளது. 

இவற்றிற்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று எண்ண இடமுண்டு. ஆகவே ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக என்று அறிந்து கொள்வது முக்கியம் என்று உயர்ஸ்தானிகருக்கு நீதியரசர் கூறினார். 

இராணுவத்தினரை தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கைவாங்கி அவர்களை இராணுவ முகாம்களில் முடக்கி வைக்குமாறு அரசாங்கத்தை கோர வேண்டும் என்று உயர்ஸ்தானிகருக்கு நீதியரசர் வலியுறுத்தினார். 

இராணுவத்தினரை வட மாகாணத்திற்குள் இதுவரை அழைத்திருப்பது கொரோனா காரணமாக என்று கூறப்பட்டாலும் இராணுவத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளில்த்தான் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இதை நீங்கள் சர்வதேச உயர்ஸ்தானிகர்களுக்கும் மற்றயவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவை பற்றி உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதாக உயர்ஸ்தானிகர் அறிவித்தார். 

அடுத்து வடமாகாணத்தின் இராணுவ அதிகாரியைக் காணச் செல்வதாகக் கூறி சுவிஸ் உயர்ஸ்தானிகரும் அரசியல் விடயப் பொறுப்பாளரும் விடைபெற்றுச் சென்றார்கள்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post