காரைநகர்- ஊர்காவற்றுறை படகு சேவையை சீரமைக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் - Yarl Voice காரைநகர்- ஊர்காவற்றுறை படகு சேவையை சீரமைக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் - Yarl Voice

காரைநகர்- ஊர்காவற்றுறை படகு சேவையை சீரமைக்க வேண்டுமெனக் கோரி போராட்டம்



யாழ்ப்பாணம் காரைநகர்- ஊர்காவற்றுறைக்கு இடையே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடாத்தப்படும் பாதை சேவையை தடங்கல் இல்லாமல் முன்னெடுக்குமாறு வலியுறுத்தி காரைநகர் இறங்குதுறையில் இன்று திங்கட்கிழமை காலை பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசங்களுக்கு கடமை மற்றும் அத்தியாவசிய சேவை நிமித்தம் போக்குவரத்துச் செய்யும் அலுவலர்களும் பொதுமக்களும் குறித்த பாதை சேவையூடாகவே பயணிக்கின்றனர்.

அண்மைக்காலமாக இப்பாதை சேவையில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டு சேவை இடைநிறுத்தப்படுவதால் பயணிகள் பெருத்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். பாதை சேவை இடைநிறுத்தலுக்குரிய காரணங்களாக கேபிள் பழுது, வெளியிணைப்பு இயந்திரம் பழுது என்று கூறப்படுகின்றன.

ஆனால், இவற்றைச் சீர்செய்து இரு பிரதேசங்களுக்கும் இடையு உள்ள அத்தியாவசிய போக்குவரத்து சேவையான பாதை போக்குவரத்து சேவையை இடைநிறுத்தாது தொடர்வதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாதை சேவையானது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெருத்த அவலங்களுக்கு மத்தியில் படகு சேவை மூலம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்திற்குச் சென்று வருவதாகவும் காரைநகர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே சீரான போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post