தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் சிவபூமி அறக் கட்டளையினால் அமைக்கப்பட்ட சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் இன்று வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தெல்லிப்பழை Pதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இத் திறப்பு வழா நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது.
கந்தபுராண கலாசாரத்தைப் பாதுகாக்கவும் ஆன்மீக சமூகப் பணிகளை விருத்தி செய்வதற்காகவும்; இந்த சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆச்சிரமத்தில் கந்தபுராண நூல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் கந்தபுராணப் படிப்பில் ஈடுபடுகின்றவர்கள் ஆச்சிரமத்தில் வந்தமர்ந்து படிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை சிவபூமி கந்தபுராண ஆச்சிரமக் கட்டடத்தின் அரைவாசிப் பகுதியில் லண்டன் அபயம் மருத்துவ சேவையினரால் மயிலிட்டிக் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் மற்றும் அமெரிக்க ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகத் துறவியுமான ரிஷி தொண்டுநாத சுவாமிகள் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெல்லிப்பழை பிரதேச செயலர், பிரதேச சபைத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment