யாழ் தென்மராட்சியில் தொடர் திருட்டு - அச்சத்தில் மக்கள் - Yarl Voice யாழ் தென்மராட்சியில் தொடர் திருட்டு - அச்சத்தில் மக்கள் - Yarl Voice

யாழ் தென்மராட்சியில் தொடர் திருட்டு - அச்சத்தில் மக்கள்




யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி பகுதியில் திருட்டுக்கள் தொடர்ந்த நிலையில் நேற்றும் அசிரியர் ஒருவர் வீட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று மதியம் கரம்பைக்குறிச்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வெல்டிங் வேலைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் (ரான்ஸ்போமர்) ஒன்றும் இரும்பு வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கிறைண்டர் ஒன்றும் திருடப்பட்டு அந்த பொருட்கள் பக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பொருட்கள் ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த திருட்டினை மேற்கொண்ட நபர் பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் முன்னரும் பல திருட்டு சம்பவங்களோடு தொடர்பு பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸாரும் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் தொடர் திருட்டில் ஈடுபடுகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் ஆசிரியர் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து பொருட்களை களவாடிவிட்டு அண்மையில் வயோதிபர்கள் இருக்கும் வீட்டில் குறித்த பொருட்களை வைத்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் வந்து திருடிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த நபர் திருடிய பொருட்களை வைத்த வீட்டில் சிசிரிவி கமெரா இருந்தமையால் பொருள் வைத்து எடுப்பதை கமெரா துள்ளியமாக படம் பிடித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான சிசிரிவி ஆதாரத்துடன் ஆசிரியர் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை கொடிகாமம், பொலிஸார் வலைவீசி தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த நபரை கண்டவர்கள் உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறும் மக்களிடம் பொலிஸார் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும்  அண்மைக்காலமாக வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் மோட்டர்கள், மற்றும் துவிச்சக்கர வண்டிகளும் பரவலாக திருடப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே வரணிப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமது முழுமையான ஒத்துழப்பையும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் வரணி மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post