சாவகச்சேரி வைத்தியசாலையின் அசண்டையீனம் - பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice சாவகச்சேரி வைத்தியசாலையின் அசண்டையீனம் - பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு - Yarl Voice

சாவகச்சேரி வைத்தியசாலையின் அசண்டையீனம் - பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு




பல்வேறு சீர்கேடுகளுடன் இயங்கும் சாவகச்சேரி வைத்தியசாலையில் மின் தடைகாரணமாக இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும்:-

சாவகச்சேரி வைத்தியசாலையில் பல்வேறு சீர்கேடுகளுக்கு மத்தியிலேயே மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியான குற்றசாட்டுகள் ஊழியர்கள்,நோயாளிகள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

குறித்த வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டால் தானியக்க முறையில் செயற்படும் மின் பிறப்பாக்கி இருந்தும் அது செயலற்று காணப்பட்டுள்ளது.

நேற்று (09) இரவு எட்டு மணிக்குப் பின் மூன்று தடவைகள், இடையிடையே மின் தடை ஏற்ப்பட்டது. இதில் சுமார் 10 நிமிடங்கள் வரை மின் தடையேற்ப்பட்டது.

பிரதான மின் தடைப்படுமிடத்து, தானியங்கி மின் பிறப்பாக்கி மூலம் மின் வழங்கப்படுவது வழமை, ஆனால் நேற்றைய தினம் பிரதான மின் வழங்கலில் தடைப்பட்டதும், தானியங்கி மின் பிறப்பாக்கி இயங்கவில்லை. இதனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இருளில் மூழ்கியது.

இதனால் வைத்தியசாலை நோயாளர் விடுதிகளில் இருந்துள்ள நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு மின் தடை ஏற்பட்ட குறித்த நேரத்தில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருதய நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், மின்தடையினால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவம் மருத்துவமனை உள்ளகத் தகவல்கள் உறுதி செய்துள்ள்து.

இதன்போது சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க கதிர்காமு வைரவநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலை பல சீர்கேடுகளோடு இயங்கி வருகிறது. கடந்த ஐந்து தினங்களுக்கு முன், விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளியைப் பார்வையிட கைதடியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை காவலாளிகள் மூவர் தாக்கி காயக்படுத்திய சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பின்புலமாக இருந்துள்ளதுடன், குறித்த வைத்தியர் தாக்குதலுக்குள்ளானவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதல்ச் சம்பத்தில் பாதிக்கப்பட்டவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்யச் சென்ற போதுஇ வைத்தியருக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்ய முடியாது என மறுத்துள்ளனர்.

வைத்தியருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்தால் வைத்தியர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவார்கள் அதனால் முறைப்பாட்டை எடுக்க முடியாது என பொலிஸார் முறைப்பாட்டாளரை திசை திருப்பி முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளனர்.

மருத்துவரை விடுத்து காவலாளிகளுக்கு எதிராக மாத்திரம் முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர். பொலிஸாரின் செயற்ப்பாட்டினால் மனத் தாக்கமடைந்த நபர், பொலிஸாரால் தமக்கு நீதி கிடைக்கப் போவதில்லையென முறைப்பாடு எதையும் பதிவு செய்யாது சென்றுள்ளார்.

அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலையின் விடுதிகளில் உள்ள மலசல கூடங்கள் மற்றும் குளியலறைகளில் சீரான மின் வசதிகள் இல்லாததுடன் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

நீர்க்குழாய்களும் சீரின்மையாகவும் உடைந்து மீள் திருத்தம் செய்யப்படாத நிலையில் பல காலமாக காணப்படுகிறது. இது தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் பெறுப்பற்ற வித்த்திலேயே செயற்ப்படுவதாக விடுதிகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் தெரிவித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post