நல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - தேர்தல் கால கூட்டு மட்டுமே என அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice நல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - தேர்தல் கால கூட்டு மட்டுமே என அங்கஜன் தெரிவிப்பு - Yarl Voice

நல்லூர் போராட்டக் குழுவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை - தேர்தல் கால கூட்டு மட்டுமே என அங்கஜன் தெரிவிப்பு




நல்லூர் ஆலய பகுதியில் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி வரும் குழுவுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை நீர்ப்பாசன அமைச்சின் கீழ் கிராமிய வயல்கள் நிலங்கள் மற்றும் குளங்கள் நீர்த்தேக்கங்கள் புனரமைக்கும்  திட்டத்தின் கீழ் அரியாலை கிழக்கு ஐயனார் கோயில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் குழுவின் தலைவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எம்முடன் இணைந்து போட்டியிட்டார்.

அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பவர் என அறிந்தே அவரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின் அவர்  சிவில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து செயற்பட்டு வருகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் எம்முடன் சேர்ந்து போட்டியிட்டதால் அவர் எம்முடன் இணைந்து தான் செயற்படுகின்றார் என சிலர் தவறாக நினைக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தேர்தலில் என்னுடன் போட்டியிட்டார்.

பின்னர் கட்சியை விட்டு தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றம் சென்றிருக்கிறார்.

சாணக்கியன்  கொள்கை எனது கொள்கையுடன் ஒத்துப்போகாது அவரது செயற்பாடுகள் எனது செயற்பாடுகளுடன் ஒத்துப்போக முடியாது இவ்வாறு நடைமுறைப் பிரச்சினைகளை இருக்கின்றன.

அதே போன்று நல்லூரில் போராட்டம் நடத்துபவருக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

அவர் தெரிவித்து வரும் சில கருத்துக்கள் மக்களை வேதனை படுத்துவதாக அமைந்துள்ள நிலையில் அதனை அவர் உணர்வார் என நான் நம்புகிறேன்.

தேர்தல் காலங்களில் பல நபர்களை தெரிவு செய்கிறோம் சில நபர்களுடன் மட்டும் தொடர்ந்து பயணிக்கின்றோம் சிலருடன் தேர்தல் கால கூட்டு மட்டுமே என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post