ஜ.நா புதிய தீர்மானம் பயனற்றது - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே நீதியை பெற்று கொள்ள முடியும் - தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட அழைப்பு - Yarl Voice ஜ.நா புதிய தீர்மானம் பயனற்றது - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே நீதியை பெற்று கொள்ள முடியும் - தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட அழைப்பு - Yarl Voice

ஜ.நா புதிய தீர்மானம் பயனற்றது - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே நீதியை பெற்று கொள்ள முடியும் - தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட அழைப்பு



சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் குற்றஞ்சாடியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராத இது போன்ற தீர்மானங்களை இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும் தமது சுய நலன்களை அடிப்படையாகவும் கொண்டே வல்லரசு நாடுகள் கொண்டு வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென பிரதான கோரிக்கையாகும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி மொன்று நடாத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலுமொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆகையினால் அனைத்து தரப்பினரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேசத்திடமே தமிழ் மக்கள் நீதியை கோருகின்றனர். அதனடிப்படையிலையே இலங்கையை சர்வதேச நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தவிர்த்து தற்போது கொண்டு வரப்படும் 46.1 என்ற தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கான நீதி கிடைத்து விடாது. குறிப்பாக கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை விடவும் வலு குறைந்ததாகவே இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

ஆகையினாலே தான் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு பாரப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றோம். இதனையே ஜ.நா.வின் இன்னாள் முன்னாள் ஆணையாளர்கள் கூட சொல்லியிருக்கின்றனர்.

எனவே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கு ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் அல்லது நிலைப்பாட்டில் இருப்போமேயானால் அதுவே நீதிக்கான எமது கோரிக்கையை வலுப்படுத்தும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post