ஆசிரியர்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Yarl Voice ஆசிரியர்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் - Yarl Voice

ஆசிரியர்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்




கடமையுணர்வோடும், அர்ப்பணிப்போடும் பல்வேறு சுமைகளோடு கடமைசெய்கின்ற ஆசிரியர்கள்மீது குறை சொல்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் காட்டமாக எடுத்துரைத்துள்ளது.

இது தொடர்பில் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பில்....

நேற்றைய தினம் (05.02.2021)கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சார்ந்த ஆசிரியர்களின் ஆசிரியப்பணியை கொச்சைப்படுத்தும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தமை ஆசிரியர்கள் மத்தியில் பாரிய மனக்கவலையை தோற்றுவித்துள்ளது.
அக்கருத்தானது ஆரோக்கியமானது அல்ல.

இலங்கையின் கல்வித்திட்டத்திலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அதிலும் தமிழர் பிரதேச கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.
இது அரசியலால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்று. இதனை தமிழ் அரசியல் சார்ந்தவர்கள் கண்டுகொள்ளாமலும் அன்றி அதுபற்றிய தெளிவில்லாமலும் நடந்துகொண்டுவிட்டு ஆசிரியர்களைக் குறை சொல்வதும் பிரதேசரீதியாக பகிரங்கமாக பேசுவதும் ஆரோக்கியமானது அல்ல.

வட கிழக்கு மாகாணங்களின் கல்வி தொடர்பாக இனம் சார்ந்த அரசியல் தலைவர்களுடனும், இரண்டு மாகாணங்களின் மாகாணசபை உறுப்பினர்களுடனும் தனித்தனியே சந்திப்புக்களை நடாத்தி ஆழமாக எடுத்துரைத்தோம்.
அதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காதவர்கள் ஆசிரியர்கள்மீது குறை சொல்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

ஆசிரியர்கள்மீது குறை சொல்வோர் முதலில் தாங்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும்.

ஒரு பிரதேசத்தில் பிறந்து அங்கேயே கற்று உயர்தொழில் கிடைத்ததும் அந்தப்பிரதேசத்தையே மறந்துவிட்டு அந்தப்பிரதேசத்திற்கு இன்னுமொருவர் வந்து சேவகம் செய்ய வேண்டுமென்று நினைப்பது வாழவைத்த பிரதேசத்திற்கே துரோகம் செய்யும் செயற்பாடாகும்.

ஆகையால் இனம் சார்ந்து பிரதேசம் சார்ந்து அரசியலில் ஈடுபடுவோர் ஆசிரியர்கள்மீது குறை கூறுவதை விட்டுவிட்டு ஒட்டுமொத்த தமிழர் பிரதேசங்களின் கல்வியில் பூரண அறிவோடு தொழிற்படவேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் காட்டமாக எடுத்துரைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post