இயக்குநர் பி.வாசு இயக்கிய ‘சின்னதம்பி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில், இது குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் குஷ்பு.
பிரபு மற்றும் குஷ்பு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்த சின்னதம்பி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 9 திரையரங்குகளில் 356 நாட்களுக்கு மேல் ஓடியது அதோடு 45-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. படிக்காத எளிமையான குடும்பத்து ஆணுக்கும், படித்த பணக்கார பெண்ணுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
தனக்கு இந்தப் படம் எந்தளவு முக்கியமானது என்பது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த குஷ்பு, "சின்னதம்பி... இந்த மாணிக்கம் வெளியாகி 30 ஆண்டுகள். நேரம் மிக வேகமாக பறக்கிறது. எப்போதும் என் இயக்குனர் பி வாசு சாருக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் கே.பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம்), அப்புறம் எனது ஃபேவரிட் இணை நட்சத்திரம் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற சின்னதம்பி, கன்னடத்தில் 'ராமாச்சாரி' (1991), தெலுங்கில் 'சாந்தி' (1992), இந்தியில் 'அனாரி' (1993) என்ற பெயர்களில் வெளியானது. இப்படத்தில் மனோரமா, ராதா ரவி, கவுண்டமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பி வாசுவின் மகன் சக்தி இந்த படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.
Post a Comment