ஒருபக்கம் ராணுவமும் மறுபக்கம் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக இங்கே பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா
கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக ,அங்கு சிகிச்சை பெற்றவர்கள் எமது கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்தும் வெளியில் இருந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது அளவுக்கு அதிகமான தொற்றாளர்கள் ஒரே நேரத்தில் நோயாளர் காவு வண்டியில் ஏற்றிச்செல்லப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர் .
ஒரு நோயாளர் காவு வண்டியில் அதிகமாக ஏற்றிச் செல்லப்படுகின்ற அதேவேளை இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக கொதிக்கும் வெயிலில் நிறுத்தப்பட்டு தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. இதனால் தொற்றாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். மோசமான அவலங்களை சந்திப்பதாக தொற்றுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கின்றனர் .
வட்டுக்கோட்டை கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இந்த குறைபாடுகள் காணப்படுகின்றது. தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்கள் எங்கு தங்குவது என்பது அங்கு ஒழுங்கமைக்கப்பட்டு காணப்படவில்லை .அங்கு சரியான வழிகாட்டுதல் இல்லை .பத்து நாள் தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேற போகின்றவர்களும் புதிதாக தனிமைப்படுத்தலுக்கு செல்பவர்களும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
தொற்றாளர்கள் தங்கியிருந்த இடம் தொற்று நீக்கப்படுவது இல்லை என்றும் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் மலசலகூடங்கள் சுத்திகரிக்க படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது.
உணவுக் கழிவுகள் மாத்திரம் நாளாந்தம் அகற்றப்படுவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே அக்குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
முதியோர் மற்றும் வேறு நோய்களுக்குள்ளானோரை பராமரிக்கும் பணியாளர்கள் அங்கு இல்லை. நிலையத்தை பராமரிக்க சுகாதார தொண்டர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இவற்றுக்கான பொறுப்பை உரிய அமைச்சே ஏற்க வேண்டும். அமைச்சு உரிய வசதியை நிதியுதவியை ஏற்படுத்தியிருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் சிறப்பாக செய்திருப்பார்கள் என்பது எமது நம்பிக்கை .
இதற்கு பொறுப்பான அமைச்சு அசமந்தமாக செயற்படக்கூடாது மனிதாபிமானத்தோடு தொற்றாளர்கள் நடத்தப்படவேண்டும் .மூன்று நேரமும் சோறு உணவாக இராணுவத்தினரால்
வழங்கப்படுகிறது. தமிழ் மக்கள் மூன்று நேரமும் சோறு சாப்பிடுவதில்லை. கடந்த வாரங்களில் தென்னிலங்கையில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டபோது அதை நாம் எதிர்க்கவில்லை .விமர்சிக்கவில்லை அது அவர்களுக்கு ஏற்ற உணவாக இருந்திருக்கலாம் .ஆனால் தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்பவே எமக்கான உணவு வழங்கப்பட வேண்டும் .உரிய தரப்பு இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் .
ஒருபக்கம் ராணுவமும் மறுபக்கம் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக இங்கே பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது .அதற்காக பொதுச்சுகாதார பரிசோதகர்களை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நாட்டிற்காக கடந்த இரண்டு வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் .அவர்களது அர்ப்பணிப்பை நாம் பாராட்டுகின்றோம். அவர்களுக்கான வசதி வாய்ப்பு வசதி வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
பிசிஆர் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசாங்கம் வேண்டுமென்றே வடக்கு கிழக்கை புறக்கணித்து வருவதாகவே நாம் கருதுகிறோம் .ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிசிஆர் இயந்திரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.
Post a Comment