ராஜபக்ச ரெஜிமென்டில் இருந்து நாட்டைப் பாதுகாக்க எதிரணியினர் ஒன்றிணைய வேண்டும்! - ஐ.தே.க. அழைப்பு! - Yarl Voice ராஜபக்ச ரெஜிமென்டில் இருந்து நாட்டைப் பாதுகாக்க எதிரணியினர் ஒன்றிணைய வேண்டும்! - ஐ.தே.க. அழைப்பு! - Yarl Voice

ராஜபக்ச ரெஜிமென்டில் இருந்து நாட்டைப் பாதுகாக்க எதிரணியினர் ஒன்றிணைய வேண்டும்! - ஐ.தே.க. அழைப்பு!



ராஜபக்ச அரசைத் துரத்தி அடித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"2021ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூகம் என அனைத்துத் துறைகளும் பாரிய கஷ்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தன. அதேநிலையிலேயே புதிய வருடம் பிறந்திருக்கின்றது. அதனால் இந்த வருடமும் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படும் நிலையே இருக்கின்றது.

ஏனெனில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் காஸ், பால்மா மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வரிசையில் இருக்கவேண்டிய நிலையே தொடர்கின்றது.

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசிடம் டொலர் இல்லை. அதனால் பங்களாதேஷிடம் கடன் வாங்கிய இந்த அரசு அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தானிடம் கடன் வாங்கும் நிலையே இருக்கின்றது.

அதனால் 2022ஆம் ஆண்டும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கஷ்டப்படவேண்டிய வருடமாகவே அமையும் நிலையே இருக்கின்றது.

2015இல் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படும்போதும் நாடு பொருளாதார ரீதியில் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது. சர்வதேச ரீதியில் எமது நாடு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் நாட்டை மீட்டிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு முடியுமாகியது.

அதனால் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசிய கட்சியினரால் மாத்திரமே முடியும் என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

எனவே, இந்த அரசைத் துரத்தியடித்து, ராஜபக்ச ரெஜிமென்டில் இருந்து நாட்டைப் பாதுகாக்க, நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டிய காலம் வந்துள்ளது. அதற்குத் தலைமை தாங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது. அதனால் எதிர்க்கட்சி உட்பட அரச விரோத கொள்கையுடைய அனைவரும் எம்முடன் அணிதிரள முன்வர வேண்டும்" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post