வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன! - Yarl Voice வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன! - Yarl Voice

வெடிபொருட்களுடன் வந்த ஆளில்லா சிறிய ரக விமானங்கள் பாக்தாத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டன!



'''''ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தை நோக்கி வெடிபொருட்களை நிரப்பியவாறு பறந்துவந்த இரண்டு ஆளில்லா சிறிய ரக விமானங்கள் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஈராக் இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தலைநகா் பாக்தாத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரை இலக்குவைத்து தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இத்தாக்குதலுக்கு பழிதீா்க்கும் வகையில் ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வெடிமருந்து நிரப்பிய இந்த ட்ரோன்களை அனுப்பியது யார்? எனத் தெரியாதபோதும் வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் இறக்கைகளில் சுலைமானி கொலைக்கு பழிதீர்ப்பு போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான ஈராக்கின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கா, கடந்த மாதத்துடன் அந்த ஆதரவை நிறுத்திக் கொண்டது. எனினும், 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர் ஈராக் இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்குவதற்காக தலைநகா் பாக்தாத்தில் முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post