சினம்கொள் படத்தினர் யாழில் ஊடக சந்திப்பு - Yarl Voice சினம்கொள் படத்தினர் யாழில் ஊடக சந்திப்பு - Yarl Voice

சினம்கொள் படத்தினர் யாழில் ஊடக சந்திப்பு




தடுப்புச் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசும் சினம்கொள் திரைப்படத்தை ஈழத்தில் உள்ள மக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று ஈழத்து எழுத்தாளரும் சினம்கொள் படத்தின் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். 
ஓடிடிதளத்தில் (eelampaly.com) வெளியாகியுள்ள சினம்கொள் படத்திற்கு ஈழ மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
யாழ் ஊடக மையத்தில் சினம்கொள் திரைப்படக் குழுவினர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
மேலும் தெரிவிக்கையில்,
 
“சினம்கொள் திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். அவர் பிச்சைக்காரன், செல்லாமலே, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களின் இயக்குனர் சசியிடம் உதவி இயக்குனராக கடமையாற்றியவர். அத்துடன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பழனிகுமார் மாணிக்கமும் இசையமைப்பாளராக என்.ஆர். ரகுநந்தனும் பணியாற்றியுள்ளார். ரகுநந்தன் தென்மேற்குப் பருவக்காற்று, நீர்பபறவைகள், சுந்தரபாண்டியன் முதலிய படங்களுக்கு இசையமைத்த முக்கிய ஆளுமையாகும். 
 
மலையகம், வடக்கு கிழக்கு, சிங்கள கலைஞர்கள், தமிழக கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள், கனேடிய கலைஞர்கள் மற்றும் சர்வதேச கலைஞர்கள் எனப் பரதரப்பட்டவர்களும் இணைந்து உருவாக்கிய கூட்டுப்படைப்பான சினம்கொள் உலகத் தரமான படமாக இருப்பதாகவே தமிழக திரைப்பட பிரபலங்கள் வியந்து பாராட்டி இருப்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன். 
 
இந்தப் படத்தில் கதாநாயகனாக ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த அரவிந்த் சிவஞானமும் கதாநாயகியாக நர்வினி டேவிட்டும் நடித்துள்ளனர். அத்துடன் பெருமளவான கதாபாத்திரங்களில் ஈழத்தை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். 
 
ஈழ மண்ணிக்காட்சியையும் ஈழ மண்ணின் கதையையும் கலை அழகியல் குன்றாமல் இந்தப் படம் பேசுகின்றது. ஈழத்தில் இருந்து வரும் படங்கள் டாக்குமன்ரி படங்கள் எனக் குறைகூறப்படுகின்ற நிலையில் சிறந்த கெமர்சியல் படமாக, ஜனரஞ்சகப் படமாக சினம்கொள் அமைந்திருப்பதுடன் கலை அழகியல் குன்றாத வகையிலும் இப் படம் அமைந்திருப்பதை இந்திய ஊடகங்களின் விமர்சனங்கள் அண்மையில் பாராட்டி உள்ளன. 
 
அத்துடன் இந்திய திரைப்பட தணிக்கைச் சபை இந்தப் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளது. இந்திய தணிக்கை சபையின் யூ சான்றிதழ் பெற்ற முதல் ஈழத் திரைப்படமும் இதுவே. அத்துடன் இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை சபையும் இந்தப் படத்திற்கு சான்றிதழ்  அளித்துள்ளது. 
 
இந்தப் படத்தை பார்த்துள்ள தமிழகத் திரைப்பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருவதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். குறிப்பாக நடிகர் நாசர் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதேபோல இயக்குனர் இமையம் பாரதிராஜா, நடிகர் சத்தியராஜ், இயக்குனர் சசி, இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் வைரமுத்து எனப் பலரும் வியக்கும் படைப்பாக சினம்கொள் உருவாகி உள்ளமை ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் கலைப்பணி என்றே கருதுகிறேன். 
 
அத்துடன் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் பலவும் சினம்கொள் படம் குறித்து பாராட்டுக்களையும் வியப்பான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றது. ஈழத் தமிழ் மக்கள் இதுபோன்ற சிறந்த சினிமா படைப்புக்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை சினம்கொள் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஈழச் சினிமா வரலாற்றில் சினம்கொள் ஒரு மைல் கல்லாக அமையும் என்றே நம்புகிறேன். 
 
உலக நாடுகளில் இந்தப் படம் பரீட்சார்த்தமாக திரையிடப்பட்ட போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு அளித்தார்கள். படத்தை பார்த்த அத்தனை பேரும் கண்ணீரோடும் நெகிழச்சியோடும் சென்றதைக் கண்டோம். அதுபோல ஈழத்தில் யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் இப் படம் வெளியிடப்பட்ட போதும் பெருந்திரளான மக்கள் பெரும் நெகிழ்ச்சியுடன் கண்ணீருடன் இந்தப் படத்தை பார்த்தார்கள். மக்களின் இதயத்தை தொடும் வகையில் தீராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த படைப்பாகவும் இப் படம் உருவாகி இருக்கிறது. 
 
இப்போது நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கான நோக்கம் யாதெனில், தற்போது சினம்கொள் ஈழம்பிளே (eelampaly.com) என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் எந்த விதமான கட்டணங்களும் இல்லாமல் இப் படத்தை பார்க்கலாம். எந்த மக்கள் பற்றிய திரைப்படமோ அந்த மக்களே இத் திரைப்படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இயக்குனர் ரஞ்சித் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். அதேபோல வெளிநாடுகளில் படத்தை பார்க்கத் தவறிய உலகத் தமிழர்கள் அனைவரும் இப் படத்தை பார்க்க வேண்டும். 
 
எனவே எமது மக்கள் இந்தத் திரைப்படத்தை பார்வையிட வேண்டும். பேராதரவு வழங்க வேண்டும். நிச்சயமாக உங்கள் அனைவரையும் மிகவும் ஈர்க்கின்ற படமாக மீண்டும் மீண்டும் பார்க்க்கின்ற படமாக சினம்கொள் அமையும் என்று திடமாக நம்புகிறேன். ஊடக நண்பர்களும் எமது தாயக பத்திரிகைகளும் இந்தப் படம் பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 
 
ஏன் படத்தின் வெளியீடு தாமதமானது? என்று இச் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியமைக்குப் பதில் அளித்த தீபச்செல்வன், உலக நாடுகளில் பரீட்சார்த்த முயற்சியாக திரையிடல் நடந்தது. அந்த திரையிடல்கள் நடந்து கொண்டிருந்த போதே கொரோனா தொற்று ஏற்பட்டமையால் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. அத்துடன் யாழ் சர்சதேச திரைப்பட விழாவின் திரையிடலைத் தொடர்ந்து இலங்கையில் திரையிடல் முயற்சி நடந்தபோதும் இதனையே எதிர்கொண்டோம். விரைவில் இலங்கையில் திரையரங்குகளில் சினம்கொள் வெளியிடப்படும். இப்போது உங்கள் வீடுகளில் இருந்தே ஈழம்பிளே (eelampaly.com) என்ற ஓடிடி தளம் வாயிலாக இந்தப் படத்தை பார்த்து ஆதரவைத் தாருங்கள்...” என்று அவர் மேலும் தெரிவித்தார்.20
-

0/Post a Comment/Comments

Previous Post Next Post