புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் பயணிக்கின்றனர்! ஆய்வில் தகவல் - Yarl Voice புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் பயணிக்கின்றனர்! ஆய்வில் தகவல் - Yarl Voice

புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் பயணிக்கின்றனர்! ஆய்வில் தகவல்



இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். அதே வேளை வருடத்திற்கு சராசரியாக 20000 இலங்கையர்கள் மரணிக்கின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம் பெற்றபோதே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தெரிவிக்கையில்,உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அந்தவகையில் 2022ஆம் ஆண்டின் உலக புகையிலை எதிர்ப்பு தினம் “சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்" என்ற கருப் பொருளில் இடம்பெறவுள்ளது.

புகைப் பொருள் பாவனையானது சூழலை மாசடையச்செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக, சிகரட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன. சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது.  மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

சிகரட் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பிரதான மூலப் பொருளான புகையிலை  பயிர் செய்கையானது சூழலிற்கு பாரியளவில் தீங்கு விளைவிக்கின்றது, அதாவது  புகையிலை உற்பத்திக்கு அதிகமான இரசாயனங்கள் பாவிக்கப்படுகின்றது. புகையிலை உற்பத்தி செய்யப்படும் மண் வளமற்றுப் போவதுடன் அரிய வகை உயிரினங்கள் அம்மண்ணில் வாழ்வதும் குறைவடையும், இதனால் இலங்கையில் அதிகமான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியிருக்கின்றன.



எமது நாட்டில் புகைத்தல் பாவனையின் காரணமாக தினமும் சராசரியாக 55 பேர் அகால மரணத்தைத் தழுவுகின்றனர். அதே வேளை வருடத்திற்கு சராசரியாக 20000 இலங்கையர்கள் மரணிக்கின்றனர். புகையிலை நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தினமும் இறப்பதால் அவ்வெற்றிடத்தை பூரணப்படுத்துவதற்காக அந்நிறுவனம் இளைஞர்களையும், சிறுவர்களையும் பிரதானமான இலக்காக கொண்டுள்ளது.


எமது நாடு தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதோடு, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காணப்படும் இத்தருணத்திலும்; வீணாக சிகரட்டிற்கு செலவழிக்கபடுவதால் எஞ்சி இருக்கின்ற டொலர்களையும் பிரித்தானியா, அமெரிக்கா சுரண்டியெடுக்கின்றன. மேலும் சிகரட் நிறுவனத்திடம் வரி அறவிடப்பட்டாலும் அத்தொகையையும் விட பாரிய தொகையொன்று புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புக்களிற்கு செலவிடப்படுகிறது.

அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்த போதிலும் சிகரட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை
என்பதுடன், அதிகரிக்கப்பட்ட விலையின் அளவானது சிகரட் உற்பத்தி நிறுவனத்திற்கு இலாபம் பயக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

 இதன் பின்புலத்தில் சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் தலையீடு இருப்பதாகவே துறை சார்ந்த நிபுனர்களினால் சந்தேகிக்கப்படுகிறது. இது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். 

சிகரட் பாவனையினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார, சுகாதார, சமூக பிரச்சினைகளை குறைப்பதற்கும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகல் நிலையத்தினால் சிகரட் புகைப்பதனால் ஏற்படும் சூழல் மாசடைவுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல், பொருளாதார பிரச்சினை அதிகரித்திருக்கும் இக்காலப் பகுதியில் வீணாக சிகரட்டிற்கு செலவாகும் பணத்தை சேமித்து பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க பாவனையாளர்களை ஊக்கப்படுத்தல், எமது நாட்டிலிருந்து, பிரித்தானியா, அமெரிக்கா சிகரட் உற்பத்தி நிறுவனத்தினால் சுரண்டியெடுக்கப்படும் டொலர்களை சிகரட் புகைப்பதை நிறுத்துவதன் மூலம் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், புகைத்தல் பாவனையினால் ஏற்படுகின்ற பிரச்சினைகளின் கனதியை கருத்திற்கொண்டு புகைத்தல் எதிர்ப்பு தினத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு ஊக்கமளித்தல், அரசாங்கத்திற்கு இலாபமீட்டும் வகையிலான தற்போதைய பணவீக்கத்திற்கு அமைய, சிகரட் மீதான வரி அறவீட்டு முறைமை ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து, அரசாங்கத்திற்கு அதிகளவு வருவாயை ஈட்டிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல், சிகரட் உற்பத்தி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து அவற்றிலிருந்து இளைஞர்களையும் சிறுவர்களைளும் பாதுகாப்பதற்கு முயற்சித்தல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.

இவ் ஊடக சந்திப்பில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post