தமிழர்களது உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வு அவசியம்!! ஜநாவுக்கு மகஜர் - Yarl Voice தமிழர்களது உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வு அவசியம்!! ஜநாவுக்கு மகஜர் - Yarl Voice

தமிழர்களது உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வு அவசியம்!! ஜநாவுக்கு மகஜர்



தற்போதைய பொருளாதாரச் சிக்கலுக்கான தீர்வைக் காண்பது எந்தளவு முக்கியமோ அதேபோல தமிழர்களதும் ஏனையோரதும் கூட்டு உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வைக் காண்பதென்பதும் முக்கியமானது என ஜநாவுக்கான மகஜரில் இன்றைய போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் கள அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்திற்கு பின்னர் போராட்டக்காரர்கள் ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர் . 

வட-கிழக்கு பொது அமைப்புகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் முன்வைக்கும் வேண்டுதல் மனு எனும் தலைப்பில் இந்த மகஜர் ஆங்கில மொழிமூலம் தயாரிக்கப்பட்டது.

அந்த மகஜரிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரின் தமிழ்வடிவத்தில்,

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்காகச் சர்வதேச விசாரணையைக் காவு கொடுக்கவேண்டாம். இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 50ஆம் அமர்வில் 13 ஜூன் 2022 அன்று ஆற்றிய உரையில் சொல்லியிருந்த அப்பட்டமான, உள்நோக்கத்துடனான பொய்களை தமிழர்கள் கண்டிக்கிறார்கள்.

இலங்கைத் தீவின் வட-கிழக்கைத் தழுவிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் பொது அமைப்புகளாகிய கீழே கையெழுத்திட்டிருக்கும் அமைப்புகளைச் சேர்ந்தோராகிய நாம் யாழ்ப்பாணத்தில் 19 ஜூன் அன்று அமைச்சர் பீரிஸின் மேற்படி உரையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காகக் கூடியபோது தங்களுக்கு முன்வைத்துள்ளோம். அமைச்சரின் குறித்த அறிக்கையிடல் ஐ.நா. உருவாக்கியுள்ள ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46-1 தீர்மானத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளியகப் பொறிமுறையை ஐ.நா.வே இல்லாது ஆக்கிவிடும் தீய உள்நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. இதை நாம் வெளிப்படையாகக் கண்டிப்பதற்காகவே ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபடுகிறோம்.

தனது ஜெனீவா உரையில்,  46-1 தீர்மானம் தொடர்பாகப் பேசுகையில், இலங்கைத் தீவில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் பொருளாதார இடர் நீக்கத்தையும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களைக் கோரியவையாகவுமே இருப்பதாகச் சுட்டிப் பேசியதன் மூலம்,  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஏதோ தமிழ்மக்கள் இலங்கை அரசு தம்மீது இழைத்த இன அழிப்பு உட்பட்ட பெரும் சர்வதேச நீதி தொடர்பான போராட்டங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தற்போது குறைத்துவிட்டார்கள் என்ற தொனிப்பொருளை திரிபுநோக்கத்தோடு முன்வைத்திருக்கிறார். 

ஆனால், உண்மை நிலை அவர் சொன்னது போன்றதல்ல என்பதை யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தோடு  தங்களுக்கு மீள்வலியுறுத்தித் தெரிவிக்க விரும்புகிறோம். 

இலங்கை அரசு இனப் பிரச்சனையை நெடுங்காலமாகத் தீர்க்காதிருந்தமையால் திரட்சி பெற்ற சிக்கலின் ஒரு விளைவாகவும் சர்வதேசக் குற்றங்கள் தொடர்பான தண்டனையிலிருந்து தொடர்ந்தும் தான் தப்பித்துக்கொள்ளும் தன்மையைப் பேணிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட ஒரு விளைவாகவும் தற்போது எழுந்துள்ள பொருளாதாரச் சிக்கலை வட-கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் கருதுகிறார்கள். 

உள்ளார்ந்த இனப்பிரச்சனைக்கான தீர்வின் மூலமும், கடந்த காலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை சுயாதீன சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலமுமே தேவைப்படும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கூட இங்கு எய்த முடியும். 

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், மீண்டும் இந்தத் தீவில் எந்தவொரு தேசத்துக்கோ, மக்களுக்கோ, சமூகத்துக்கோ, சிறுபான்மைக்கோ இன அழிப்பு மற்றும் எந்தக் பாதகக் குற்றங்களும் நடைபெறாதிருத்தலை உறுதிப்படுத்துவதற்கும் கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் முக்கியமானது. 

ஆகவே, தற்போதைய பொருளாதாரச் சிக்கலுக்கான தீர்வைக் காண்பது எந்தளவு முக்கியமோ அதேபோல தமிழர்களதும் ஏனையோரதும் கூட்டு உரிமைகளை மதிக்கின்ற அரசியற் தீர்வைக் காண்பதென்பதும் முக்கியமானது.

இதற்கும் அப்பால், தான் மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த அனைத்து விடயங்களிலும் அமைச்சர் முற்றிலும் தவறான பொய்த் தகவல்களையே வழங்கியிருக்கிறார். 

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் வெற்றுச் சோடினையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எதுவும் நீண்டகாலம் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளுக்கு எந்தவித பலனையும் தரவில்லை. 

இலங்கை இராணுவத்தினதும் அதன் முகவர்களதும் கைகளால் வலிந்து காணாமற் செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர், அவர்கள் குறித்த எந்தப் பதிலையும் அரசு வழங்காத நிலையில், இன்னும் தமது அன்புக்குரியோரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகள் வலிந்துகாணமலாக்கப்பட்டது தமிழர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அழிப்பு நடவடிக்கை என்றே குடும்பத்தினர் அனைவரும் கருதுகின்றனர்.

எமது தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி 15 ஜனவரி 2021 அன்று தயாரித்திருந்த கூட்டுக் கோரிக்கையில் இன அழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

 அதைப்போலவே, உண்மையான ஒரு பக்கசார்பற்ற, சுதந்திரமான சர்வதேச ஆதாரத் திரட்டலுடனான பொறிமுறையையும் கோரியிருந்தார்கள். ;இன அழிப்புக் குற்றத்தை ஆராய ஐ.நா. இதுவரை தவறியுள்ளதையிட்டு நாம் கவலை கொண்டுள்ளோம். 46-1 எனும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆதாரப் பொறிமுறையை மட்டுமே கொண்டுவந்தது. 

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் 46-1 தீர்மானத்தின் இயங்குவிதி ஆறைச் சரியாகவே பொருள் கோடல் செய்துள்ளார் என்பதைக் குறிப்பெடுத்துக்கொள்ளும் அதேவேளை, தமிழர்கள் முழுமையான ஒரு சர்வதேச, பக்கசார்பற்ற, சுயாதீன விசாரணைப் பொறிமுறையையே அடுத்த தீர்மானத்தில் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், இன அழிப்பு என்ற குற்றத்தைக் கண்டறிவதற்கான ஆணையையும் அடுத்த தீர்மானம் வழங்கவேண்டும் என்றும் வேண்டுகிறோம். 

இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை சர்வதேச நீதியோடு பண்டமாற்றம் செய்ய ஐ.நா.தொகுதி அனுமதியளிக்கக்கூடாது என்றும் வேண்டுகிறோம் என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post