தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியில் சிறுதானிய விதைகள் விநியோகம் - Yarl Voice தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியில் சிறுதானிய விதைகள் விநியோகம் - Yarl Voice

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியில் சிறுதானிய விதைகள் விநியோகம்



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் சிறுப்பிட்டியைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உரங்கள் மற்றும் எரிபொருளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் உணவுற்பத்தி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு குறைந்தளவு நீரும் பசளைகளுமே போதுமான சிறுதானியச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இராசதானியம் என்ற திட்டத்தைக் கடந்த மாதம் முதல் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே நேற்று திங்கட்கிழமை (27.06.2022) சிறுப்பிட்டியில் 50 விவசாயிகளுக்குக் குரக்கன், பயறு, காராமணி ஆகியவற்றின் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. 

சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூக நிலையத்தில் கு. மயூரதன் தலைமையில் நடைபெற்ற விதைகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் இராசதானியத் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார். வளவாளராகக் கலந்துகொண்ட ஓய்வுநிலைப் பிரதி விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் குறைந்தளவு நீர்ப்பாசனத்துடனும் பசளைகளுடனும் எவ்வாறு சிறுதானியச் செய்கையினை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் பயிர்களில் பீடைகளின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை வழிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

வழங்கப்படுகின்ற விதைகளின் நிறையின் இரட்டிப்பு மடங்கு விதைகளை விவசாயிகள் அறுவடையின் பின்னர் சுழற்சி முறையில் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் பொருட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்திடம் கையளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இராசதானியத் திட்டம் முனனெடுக்கப்பட்டு வருகின்றது. விதை இரட்டி என்ற இந்த முறைமை எமது பண்டைய விவசாய மரபில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post