சங்ககாராவின் சிலையை வடிவமைத்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விடுத்துள்ள அறிவிப்பு..!! - Yarl Voice சங்ககாராவின் சிலையை வடிவமைத்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விடுத்துள்ள அறிவிப்பு..!! - Yarl Voice

சங்ககாராவின் சிலையை வடிவமைத்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விடுத்துள்ள அறிவிப்பு..!!



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 2004ஆம் ஆண்டு மினி ஒலிம்பிக் சம்பியன் கிரிக்கெட் அணி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே சங்கக்காரவின் சிலையை வடிவமைத்து கொடுத்ததாக சிலையை வடிவமைத்த கலைஞர் ஜோசப் ஜொரோமின் மார்க் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை  வடிவமைக்கப்பட்டுள்ளதாக  சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

அது தொடர்பில் சிலை வடிவமைப்பாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

தன்னிடம் சிலை வடிவமைத்து தருமாறு கோரிய மாணவர்கள் தொடர்பாக  சிலைவடிவமைப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் விளையாட்டுத்துறை அலகில் விளையாட்டு வீரர்களின் சிலைகளை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கால் பந்தாட்டம், துடுப்பாட்டம் என அனைத்து விளையாட்டுகள் தொடர்பில், அந்த அந்த விளையாட்டுக்களில் சாதித்தவர்களின் உருவச் சிலைகளை விளையாட்டு துறை அலகில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காகவே சங்காவின் சிலை உருவாக்கப்பட்டது. 

சங்காவின் சிலை கண்ணாடி இழையினால் வடிவமைக்கப்பட்டது என ஜெரோமின் தெரிவித்தார்.

மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த, மன்னார் சித்தி விநாயகர் பாடசாலை ஆசிரியரான ஜோசப் ஜொரோமின் மார்க், யாழ் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறை பட்டதாரியாவர்.

இவரது பரம்பரையினரே சிற்ப கலைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைக்கு பல்கலைகழகம் அனுமதி வழங்கவில்லை

அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, 

பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சிலை அமைப்பதற்காக எவரும் அனுமதி கோரவில்லை. வளாகத்தினுள் சிலைகளை நிறுவுவதென்பது நீண்ட பொறிமுறைகளைக் கொண்டது. அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post