பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதி - Yarl Voice பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதி - Yarl Voice

பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - மனோவிடம் ரணில் உறுதி



"தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தான் எண்ணியுள்ளார் என்று ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் தெரிவித்தார்."

- இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல ரத்நாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதியுடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பில் நேரில் பேசினார். 

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:- 

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களைத் திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும், இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்குப் போவதைத் தடுக்க முடியாது எனவும் கூறினேன்.  தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐ.ஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தான் எண்ணியுள்ளார் என்று ஐனாதிபதி மேலும் சொன்னார். அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல ரத்நாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.

இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி சொன்னார். 

இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாகக் கருதப்படும் என நான்  ஜனாதிபதியிடம் கூறினேன். இவற்றைத் தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.  

காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயக்கம் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் அரசு தரப்பினர் கருத்துக்களில் இருந்து தெரியவந்தது. அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையாவது இடைநிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு எனவும் நான்  ஜனாதிபதியிடம் கூறினேன். ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுகின்றது எனப் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் கூறினர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்டப் பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார். பெருந்தோட்டப் பகுதிகளிலேயே  51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும், கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐ.நா. நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட ஒதுக்கீட்டுத் திட்டத்தையும், அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணியையும் அமைக்கவும் கோரினேன்" - என்றார். 

இதேவேளை, அரசமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தீபாவளித் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post