முழுமைப்படுத்தாத நிலமையில் கையளிக்கப்படவிருந்த மாநகரக் கட்டடம் - முதல்வர் ஆனல்ட் அதிரடி நடவடிக்கை - Yarl Voice முழுமைப்படுத்தாத நிலமையில் கையளிக்கப்படவிருந்த மாநகரக் கட்டடம் - முதல்வர் ஆனல்ட் அதிரடி நடவடிக்கை - Yarl Voice

முழுமைப்படுத்தாத நிலமையில் கையளிக்கப்படவிருந்த மாநகரக் கட்டடம் - முதல்வர் ஆனல்ட் அதிரடி நடவடிக்கை



நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கும் - யாழ் மாநகரசபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த (27) கெர்ழும்பில் உள்ள அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத்தை (நகர மண்டபத்தை) தற்போதைய நிலையிலேயே மாநகரசபைக்கு கையளிப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போதைய நிலமையில் முழுமையாக கட்டத்தை பூரணப்படுத்தாது, இருக்கின்ற நிலையில் மாநகரசபை நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சின் செயலாளர், உள்ளிட்ட உயர் அதிகாரிகளினால் குறித்த கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது. 

இந் நிலையில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட முதல்வர் ஆனல்ட் அவர்கள் தற்போதைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நல்லாட்சி அரசில் முன்னர் பிரதமராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் நாம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இம் மாநகரசபைக்கான கட்டடத்தை நகர அபிவிருததி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க அவர்களின் மேற்படி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக புதிதாக அமைத்துத்தர முன்வந்ததுடன், மாநகரக் கட்டடத்திற்கினா அடிக்கல்லினையும் தற்போதைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களே கந்த 2019 இல் நாட்டியிருந்தார். 

இந் நிலையில் தற்போதுள்ள நிதிநிலமைகளை குறிப்பிட்டு முழுமைப்படுத்தப்படாத நகர மண்டப கட்டிடத்தை எம்மிடம் ஒப்படைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எமது மக்களின் நிலமைகள், யாழ் மாநகரசபையின் தற்போதைய நிதிப்பற்றாக்குறை மற்றும் தொடர்ச்சியாக 2 வருடங்கள் இடம்பெற்ற கொவிட் 19 பாதிப்புக்கள் ஏற்படுத்திய நிதி நிலமைகள், வருமானமின்மை உள்ளிட்ட விடயங்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் 30 வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மீண்டெழ முடியாது துன்பப்பட்டுள்ள எமது மக்களுக்கு அரசு தனது முழுமையான நிதியில் இக் கட்டித்தை அமைத்துத்தருவதே சிறந்த அங்கீகாரமாக இருக்கும். அதுவே ஏற்புடையதும் கூட. இம் மாநகர கட்டிடத்தை மீள அமைப்பதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். இது ஜனாதிபதி அவர்களுக்கும் நன்கு தெரியும். 

எனவே ஜனாதிபதியின் எதிர்வரும் 11ஆம் திகதிய யாழ்ப்பாணம் வருகையின் போது மாநகர முதல்வர் என்ற வகையில் இதன் ஆரம்பத்திற்கு வித்திட்டது போன்று நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாகவும், அதன் மூலம் தேவையான நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதாகவும், அதற்கான கோரிக்கைகளை எழுத்து மூலமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 

முதல்வர் ஆனல்ட் அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட அமைச்சின் செயலாளர் தாங்கள் குறிப்பிட்டவாறு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் விரைவாக முயற்சிக்குமாறும், குறித்த கோரிக்கை கடிதங்களின் பிரதிகளை தமக்கும் வழங்குமாறும் குறிப்பிட்டார். முதல்வரும் உறுதியளித்தார். 

முதல்வர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக முழுமைப்படுத்தப்படாமல் மாநகரசபைக்கு கையளிக்கப்படவிருந்த மாநகரக் கட்டடம் (நகர மண்டபம்) கையளிக்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது. முழுமைப்படுத்துவதற்கு தேவையான மிகுதி நிதியீட்டத்தை அரசிடமிருந்து தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கான முழு முயற்சியை முதல்வர் ஆனல்ட் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ஜனாதிபதியின் யாழ் வருகையின் போதும் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில்  மாநகர  ஆணையாளர்,  நகர   அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின்  உயர்  அதிகாரிகள்,  மாவட்ட  பணிப்பாளர்கள், வடமாகாண பணிப்பாளர்  உள்ளிட்ட பலர்  கலந்து  கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post