யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் Trine Joranli Eskedal அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று (23) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தன்னைப் பற்றிய அறிமுகம் ஒன்றை தூதுவர் முதலில் முதல்வருக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து நோர்வே அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை அரசியல் நிலமைகள் தொடர்பில் முதல்வரிடம் வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்ததை கொண்டுவருவதில் தமிழ் மக்களின் பங்களிப்பு நல்லாட்சி அரசில் இடம்பெற்ற முன்னேற்றங்கள் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான அரசியல் நிலமைகள் நாடு எதிர்நோக்கவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
புதிய அரசாங்கம் தொடர்பிலும் அரசுடனான நிலைப்பாடு தொடர்பிலும் தூதுவர் வினவினார். அதற்கு முதல்வர் பதிலளிக்கையில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. எனவே அரசு தமிழ் மக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேச வேண்டும். ஆயினும் இதுவரை அரசாங்கம் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து தூதுவர் மாநகரசபையின் சபை கட்டமைப்பு சார்ந்து சில தகவல்கள் தான் அறிந்திருப்பதாகவும் சபையை நடாத்தி செல்லும் விதம் சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நகரில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வினவினார்.
தூதுவரின் வினாவிற்கு முதல்வர் பதிலளிக்கையில் மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நகர மண்டப அபிவிருத்தி பணிகள் நெடுந்தூர பயணங்களுக்கான போக்குவரத்து தரிப்பிட அபிவிருத்திகள் இந்திய அரசின் மூலம் அமைக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் தொடர்பில் விளக்கினார்.
அத்துடன் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் புதிய முறைமையிலான திட்டம் தொடர்பிலும் AFD நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாதாள சாக்கடைத்திட்டம் தொடர்பிலும் முதல்வர் விளக்கினார்.
சந்திப்பின் இறுதியில் நோர்வே தூதுவரிடம் முதல்வர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது நாட்டின் பல பாகங்களிலும் தங்கள் நாட்டின் மூலம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்கள் போல எமது மாநகரத்திலும் நாம் முன்னெடுக்கவுள்ள ஸ்மார்ட் சிற்றி கெல்த் சிற்றி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தங்கள் அரசின் மூலம் நிதி உதவிகளைச் செய்து மாநகரத்தின் அபிவிருத்திக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதல்வரின் கோரிக்கை தொடர்பில் தான் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி சாதகமாக பரிசீலிப்பதாக குறிப்பிட்டார்.
இறுதியாக தூதுவருக்கு முதல்வர் மாநகரசபை சார்பில் ஒரு நினைவுச் சின்னம் ஒன்றைக் கையளித்தார். தூதுவரும் முதல்வருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். தூதுவர் மாநகர வருகை நினைவுப் பதிவேட்டிலும் தனது குறிப்புக்களை பதிவு செய்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் தூதுவரின் விசேட அதிகாரிகள் அரசயல் அலுவலர் மற்றும் மாநகர பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment