நீதிமன்றம் சென்றால் தேர்தலை பிற்போட வேண்டி ஏற்படுமென தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
சமகால அரசில் நெருக்கடி மற்றும் கொரோனோ தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையினால் இந்தப் பரவலைக் கட்டப்படுத்தி மக்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனால் முதலில் கொரோனோ தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி பொது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் அதனை விட தேர்தலை நடத்துவதனையே இலக்கு வைத்து அரசாங்கம் செயற்படுகிறது. ஆகையினாலே பொது மக்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு பல தரப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதற்கெல்லாம் அரசாங்கம் செவிசாய்க்காமல் தேர்தலை நடாத்தும் விடயத்திலேயே மிக அக்கறையாக இருக்கின்றது. ஆகையினால் நாட்டு மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென மீண்டும் கோருகின்றோம்.
ஆயினும் தொடர்ந்தும் அரசாங்கம் தேர்தலை நடாத்தவே முயற்சிகளை எடுத்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லுமிடத்தே தேர்தலைப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment