பிரான்ஸில் நகரசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை, ஜூன் மாதத்தில் மேற்கொள்வதற்கு பெருமளவான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை கருத்துகணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரபரப்புக்கு மத்தியில் அரசு ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட தேர்தலை நடத்த திட்டமிட்டு வருகின்றது.
இந்தநிலையில், இரண்டாம் கட்ட தேர்தலை நடத்த வேண்டுமா அல்லது வேண்டாமா என செய்தி தொலைக்காட்சி ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, பிரான்ஸில் 55 சதவீதமான மக்கள் ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 44 சதவீதமான மக்கள் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். 1 சதவீதமான மக்கள் ‘கருத்துக்கள் இல்லை’ எனவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மேயர் தேர்தலை நடத்துவது அல்லது 2021 ஜனவரியில் தேர்தல்களை முழுவதுமாக மீண்டும் நடத்துவது குறித்து பிரான்ஸ் அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
பிரான்ஸில் 35,000 நகரங்களுக்கான மேயர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் முதற்கட்டமாக சுமார் 30,000மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பரிஸ், லியோன் மற்றும் மார்சேய் உட்பட மீதமுள்ள 5,000 பெரிய நகரங்களில் மேயர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
Post a Comment