சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சென்னையில் அரசு நிர்ணயித்த 15 மண்டலங்களில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ளதால் தொற்று அதிகமிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்ட உடனே அவர்கள் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களும் சோதிக்கப்படுகின்றனர். பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 23495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13170 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் 184 பேர் உயிரிழந்துள்ளனர். 10,138 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது குணமடைபவர்களின் விகிதம் சுமார் 56 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 0.80 சதவீதமாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குத்தடையின்றி முழுமையாக கிடைக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் பொருட்களை விலையில்லாமல் அரசு கொடுத்துள்ளது. இது ஜூன் மாதமும் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது வரை 2.71 இலட்சம் பி.சி.ஆர் கருவிகள் 43 சோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடவில்லை.
தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் வெறும் 5 பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment