கொரோனா வைரஸை சமாளிப்பதற்காக, எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறும்போது, முகக்கவசம் அணிய வேண்டும் என பிரித்தானியாவின் தேசிய அறிவியல் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரச கழகத்தின் (Royal Society) தலைவர் பேராசிரியர் சர். வெங்கி ராமகிருஷ்ணன், முகக்கவசம் அணிந்தவர்களையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்ததற்கான சான்றுகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், பல நாடுகளின் முகக்கவச பயன்பாட்டுடன் ஒப்பிடும் போது, பிரித்தானியா பின்னால் உள்ளது என்றும் கூறினார்.
முகக்கவசம் அணிவது குறித்து அரச கழகம் (Royal Society) இரண்டு அறிக்கைகளை வெளியிட்டபோது உரையாற்றிய பேராசிரியர் ராமகிருஷ்ணன்,
‘செய்தி போதுமான அளவு தெளிவாக இல்லை மற்றும் வழிகாட்டுதல்கள் முரணாக இருப்பதால் பொதுமக்கள் தங்கள் நன்மைகள் குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர்.
ஏப்ரல் மாத பிற்பகுதியில், பிரித்தானியாவில் சுமார் 25 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர். ஆனால், இத்தாலியில் 83.4 சதவீதமும், அமெரிக்காவில் 65.8 சதவீதம் மற்றும் ஸ்பெயினில் 63.8 சதவீதமாகவும் இருந்தது.
முகக்கவசம் அணியாமல் இருப்பது குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அல்லது ஆசனப்பட்டி அணியத் தவறியது போன்றே சமூக விரோதமாக கருதப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாதது தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் முதல் உங்கள் பாட்டி வரை அனைவருக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது’ என கூறினார்.
Post a Comment