தேசிய இனப்பிரச்சினைக்காக புதிய அரசாங்கம் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவை நிச்சயமாக அமைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ள லங்கா சமஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் ஆளுநரும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த மஹிந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டது.
அதில் பல கட்சிகள் அங்கம் வகித்தன தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்காக பலதடவைகள் கூடி தீர்க்கமான யோசனைகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னர் யோசனை நகல் ஒன்றை தயாரித்து இருந்தோம். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டும் பங்குபற்றி இருக்கவில்லை.
தமிழ் மக்களின் தீர்வில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அதில் பங்கு பற்றி தமது யோசனைகளையும் முன் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் உண்மையாக அக்கறை இல்லை என்றே நான் கருதுகின்றேன்.
இவ்வாறான நிலையில் தற்போது தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தீர்வு தொடர்பில் மக்களிடம் பேசி வருகின்றனர். புதிய அரசாங்கம் தீர்வு காண செயற்பாட்டில் ஈடுபடும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நிச்சயமாக பங்குபற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை ஏற்படுத்தவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயினும் அந்த நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தரப்பினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்காத நிலைமையே இருந்தது.
ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் ஆறு மாதங்களுக்குள் தீர்வை ஏற்படுத்துவதாக அறிவித்து செயற்பட்ட போதிலும் தீர்வை ஏற்படுத்த முடியவில்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களையே ஏமாற்றி வந்திருக்கின்றனர்.\
இவ்வாறான நிலைமையில் தற்போதைய அரசாங்கம் தீர்வை ஏற்படுத்தவதற்கு தயராகவே இருக்கின்றது. அதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பினரும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வர வேண்டியது அவசியமானது.
இதே வேளை இந்த அரசாங்கமே அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னருமாக ஆட்சி அமைக்கின்ற போது தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும். அதனூடாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை நிச்சயமாக அமைத்து தீர்வை ஏற்படுத்தும் என்றார்.
Post a Comment