வருடாந்தம் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காலத்தில் கார்த்திகை அல்லது மார்கழி மாதத்தில் சில தினங்கள் பொன்னாலை கடலில் அதிகளவு ஓரா மீன் பிடிக்கப்படும்.
இன்று (25) காலை கடல் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் அதிகளவு ஓரா மீன்களுடன் மகிழ்ச்சியாக கரை திரும்பினர்.
ஓரா மீன் பிடிபட்ட விடயம் பரவியதும் பல இடங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் பொன்னாலை கடற்கரை மற்றும் பொன்னாலை பாலம் நோக்கி படையெடுத்தனர். மிக மலிவான விலையில் ஓரா விற்பனை செய்யப்பட்டது.
தொழிலாளர்கள் தமது உறவினர்கள், நண்பர்களுக்கு இலவசமாக ஓரா மீன் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அன்பை பலப்படுத்தினர்.
காலை தொடக்கம் மாலை வரை பொன்னாலை பாலத்தில் சனக்கூட்டமாக காணப்பட்டது. தொழிலாளர்கள் உடனுக்குடன் வலை போட்டு மீன் பிடித்து விற்பனை செய்தனர்.
இதேவேளை, சில மீனவர்களின் வலைகளில் இரவோடிரவாக ஓரா மீன்கள் திருடப்பட்டிருந்தன. அந்த மீனவர்கள் கடலுக்கு சென்று ஏமாற்றத்துடன் கரை திரும்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment