யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்கிய விடயத்தின் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும் 31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினரான வி.மணிவண்ணன் உட்பட ஆறுபேரை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கியதான அறிவித்தலை அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
அவ்வாறு அனுப்பிய கடித்த்திற்கு அமைய 21 நாட்களிற்குள் உறுப்புறுமை இழந்தமை தொடர்பான அரச இதழ் பிரசுரிக்கப்படும் என தெரிவத்தாட்சி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட உறுப்பினர்களிற்கு அனுப்பி வைத்தார்.
தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கடிதம் அனுப்பிய ஆறு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் மணிவண்ணன் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள், இருவர் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்கள். இந்த ஆறு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தெரிவத்தாட்சி அலுவலரின் இந்த முடிவிற்கு இடைக்காலத் தடைகோரி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் இந்த ஆறு உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இவ்வாறு மாவட்ட நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றில் தாக்கல் செய்த மனுக்களில் வி.மணிவண்ணனிற்கு எதிரான மனுவின் விசாரணை நேற்றைய தினம் நீதிபதிகளான ஏ.எச்.எம்.மனாப் மற்றும் சசி மகேந்திரன் முன்னிலையில் நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையிலான தீர்ப்பிற்காக எதிர்வரும் 31ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதேநேரம் மாநகர சபையின் மற்றுமோர் உறுப்பினரான மயூரனை இடை நிறுத்திய வழக்கின் கட்டளை 17 ஆம் திகதியும் எஞ்சிய நால்வரின் வழக்குகள் எதிர்வரும் 24ஆம் திகதி விசாரணைக்காகவும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment