சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு ஆதரவை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு ஆதரவை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை - Yarl Voice

சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு ஆதரவை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை



இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி வேண்டி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான இதுவரையிலான காலப்பகுதியில்  தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். 

இந் நிலையில் கடந்த 28.02.2021 ஆம் திகதி அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இரு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நல்லூர் ஆலய   வீதியில் ஆரம்பித்தனர்.

1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல்

2.தமிழர்களின் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம் போன்ற தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப் போராட்டத்திற்கு மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.

இந் நிலையில் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை கிட்டுப் பூங்காவில் இருந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் திடல் வரை மாபெரும் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு மாணவர்களாகிய நாம் தீர்மானித்துள்ளோம்.

எனவே தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளை வலியுறுத்துவதற்கான இப் போராட்டத்திற்கு மதகுருமார்கள், அரசியல்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், என பல்வேறு தரப்பினருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். 

அன்றைய தினம் காலை 10 மணியளவில் கிட்டுப் பூங்காவில் ஆரம்பமாகும் பேரணியில் கலந்து கொண்டு எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபடுவோம் வாரீர்...

0/Post a Comment/Comments

Previous Post Next Post