பொன்னாலையில் இடம்பெற்ற கல்விச் சங்கமம் நிகழ்வில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் கல்விக்கு பங்காற்றிய கிராம சேவையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஸ்ரீகண்ணன், ஸ்ரீகிருஷ்ணன் சனசமூக நிலையங்களுடன் இணைந்து வெண்கரம் இந்த நிகழ்வை நடத்தியிருந்தது.
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் திரு.திருமதி கண்ணன் ஜெகதா தம்பதிகளின் செல்வப் புதல்வன் மகிஷாந் அவர்களின் பிறந்ததின அனுசரணைடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் கல்விகற்று 2019 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த ஜேந்துசா றமேஸ், லோஜினி பாஸ்கரன், குவேகா மோகன், தனுசிகா ஸ்ரீரஞ்சன், கயூரி காந்தராசா, பத்மநாதன் கஜீபன், புஸ்பராசா சுசிஸ்கரன் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வக்குமார் தயாளன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், வெண்கரம் படிப்பக தொடக்க காலத்தில் இருந்து கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, தற்போது இடமாற்றலாகிச் சென்ற கிராம சேவையாளர் ப.தீசன் கல்விச் சமூகத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். புதிதாக வருகைதந்த கிராம சேவையாளர் ந.சிவரூபன் வரவேற்கப்பட்டார்.
அத்துடன், பொன்னாலையில் மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்பான சேவையாற்றி வருபவரும் வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் செயலாளருமான திருமதி சுகுணா சண்முகேந்திரன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி.மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி, சிறப்பு விருந்திராக கலந்துகொண்ட சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார், பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபர் தி.மோகனபாலன் ஆகியோர் மாணவர்களையும் கல்வியியலாளர்களையும் பாராட்டிக் கௌரவித்தனர்.
Post a Comment