அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பத் தலைவர் ஒருவரை வாள் வெட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியிருந்த மூவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மூவரும் தலைமறைவாகி வசாவிளான் பகுதியில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
அல்வாய் பகுதியில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி உறவினர்களான இரு பகுதியினருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முருகராசா கௌசிகன் (வயது-31) என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
சிகிச்சை பெற்றவர்களில் இருவர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் மேலும் இருவர் கொல்லப்பட்டவருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் எனவும் பருத்தித்துறை பொலிஸாரால் மறுநாள் ஏப்ரல் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் தலைமறைவாகியிருந்த மூவரும் வசாவிளான் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர்.
Post a Comment