சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளனர்.
காவல் துறையின் க்யூ பிரிவு போலீசார் தங்களை பொய் வழக்கில் கைது செய்ததாக கூறும் இலங்கை தமிழர்கள், அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ரூ.175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் 18 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனாராணியிடம் கடந்த வாரம் அவர்கள் வழங்கினர்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9ம் தேதி தொடங்கினர்.
குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய மேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்று மாலை போராட்டம் நடத்திய இலங்கைத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.மேலும் போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று போலீசார் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட நாங்கள் நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். காலவரையின்றியும் நீதிமன்ற நடவடிக்கையும் இல்லாது அடைத்து வைத்திருப்பதாகவும் குடும்பங்களுடன் சேர்த்து வழக்கினை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment