யாழ்ப்பாணம் - வடமராட்சி, முள்ளியில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை இன்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவி மூலம் உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையால் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட இந்த தொழிற்சாலை மூலம் அருகிலுள்ள பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment