தூத்துக்குடிக்கு நீர்மூழ்கியை திடிரென நகர்த்தியது இந்தியா - பாதுகாப்பு குறித்து கரிசனை - Yarl Voice தூத்துக்குடிக்கு நீர்மூழ்கியை திடிரென நகர்த்தியது இந்தியா - பாதுகாப்பு குறித்து கரிசனை - Yarl Voice

தூத்துக்குடிக்கு நீர்மூழ்கியை திடிரென நகர்த்தியது இந்தியா - பாதுகாப்பு குறித்து கரிசனை



இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன்  கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக வங்காள‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன.  இலங்கையோடு இந்திய அரசு நட்புறவை விரும்பினாலும் தமிழக தலைவர்கள் இலங்கையை எதிர்த்தே வருகின்றனர்.

இதனால் இந்தியாவின் நட்பு நாடாக இருந்த இலங்கை சீனாவிற்கு  அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவும் இலங்கைக்கு  பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக கடன்களை வாரி வழங்கி வருகிறது. இந்தியாவின் வட பகுதியான லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் அங்கு ஏற்பட்ட பதட்டம் முழுமையாக நீங்கவில்லை இரு நாட்டு பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை பலமுறை நடந்த போதிலும் அங்கு முழு அமைதி ஏற்படவில்லை.

இந்த நிலையில் தென்பகுதியான தமிழக கடலோரம் இலங்கை பகுதியில் சீனா தனது கப்பற்படையை வலிமைபடுத்தி வருகிறது.  இது சீனா- இந்தியா போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

தென்தமிழகத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் தூத்துக்குடி அனல்மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், புதிதாக குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம் என மிக முக்கிய நிறுவனங்கள் இங்குள்ளது.

இதையொட்டி, இந்திய தரப்பிலும் ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பீரங்கிகள், அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் ஏற்கனவே இருக்கும் சாலையை அகலப்படுத்தாமல் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தேவை ஏற்பட்டால் போர் விமானங்கள் இந்த சாலைகளில் இறங்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, இந்திய .கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன்  கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படை தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும் நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த "சிந்துஷாஸ்ட்ரா" நீர்மூழ்கி கப்பல் வந்து இருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கபடுகிறது.  கப்பல் இன்னும் ஒரு வார காலம் தூத்துக்குடி .துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்திய கடற்படை சார்பில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post