நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
உலகின் பிரம்மாண்ட சொகுசு கார்களில் முதன்மையானது ரோல்ஸ் ராய்ஸ் இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய். ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் கேட்கும் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் தனித்தனி வசதிகளுடன் தயாரிக்கப்படுகின்றது.
அந்த வகையில், ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை காரை இங்கிலாந்திலிருந்து 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் தனது உரிமையைத் தான் கோரினார் என்று ஒரு தரப்பும், விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்று ஒரு தரப்பும் சமூக வலைதளங்களில் வாதிட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்துஇதுதொடர்பாக விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, ‘இது போன்று வேறு எந்த நுழைவு வரியை எதிர்த்த வழக்குகளிலும் இது போன்று அபராதம் விதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் கடுமையான விமர்சனத்தால் தன்னுடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிட்டது. அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே 20 % நுழைவு வரி செலுத்தப்பட்டுவிட்டது. ஒரு வாரத்தில் மீதி தொகையை செலுத்த தயார்’ என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
விஜய் தரப்பு வாதத்தைக் கேட்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி கருத்துக்கள் தெரிவித்தும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
Post a Comment