யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்க முயற்சி? ;ஜனநாயக விரோதம் என பிரதமருக்கு சம்பந்தன் கடிதம் - Yarl Voice யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்க முயற்சி? ;ஜனநாயக விரோதம் என பிரதமருக்கு சம்பந்தன் கடிதம் - Yarl Voice

யாழ். அரச அதிபராகவும் சிங்களவரை நியமிக்க முயற்சி? ;ஜனநாயக விரோதம் என பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்




யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவரை நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

95 வீதம் தமிழ் மக்களைக் கொண்ட வட மாகாணத்துக்கு ஏற்கனவே தமிழே தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மற்றொரு அதிர்ச்சி தரும் தகவலாக இது அமைந்துள்ளது.

எனக்கு அறிவிக்கப்பட்ட வகையில் மிக விரைவில்,யாழ் மாவட்டத்துக்கு தமிழ் பேச முடியாத ஒருவர் அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம், யாழ். மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர். மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வா கத்தைச் சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்களாவார்கள்.

இந்தப் பின்னணியில் தமிழ் பேசத் தெரியாத ஓர் அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்துக்கு நியமிப்பது பொருத்த மற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும் என அந்தக் கடிதத்தில் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் அவருடனான வாய் மூல மற்றும் எழுத்து மூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறை யான விளைவையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.

எனவே அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து, மேற்குறித்த விடயங்களைக் கருத்திக்கொண்டு யாழ். மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்றிறனுமுள்ள தமிழ் பேசும் ஓர்  அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் எனவும் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post