யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு மூன்று நாட்கள் இடம்பெறும் - Yarl Voice யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு மூன்று நாட்கள் இடம்பெறும் - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு மூன்று நாட்கள் இடம்பெறும்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.  முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர். 

இது  தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று இன்று 28 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.  இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், கல்வி மற்றும் ஆராய்சி வெளியீடுகள் பிரிவின் உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன் போது ஊடகங்களுக்கான ஊடக விபரிப்பை கலைப் பீடத்தின் பீடாதிபதியும், பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவருமான பேராசிரியர் கே. சுதாகர் வழங்கினார் . அங்கு அவர் வழங்கிய ஊடக விபரிப்பின் முழு விவரமும் வருமாறு: 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - இலங்கை
35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – இரண்டாவது அமர்வு
03, 04, 05 மார்ச், 2022

எல்லாம் வல்ல பார்வதி சமேத பரமேஸ்வரனின் அருளாசியுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.  

நாட்டில் தற்போது நிலவும் கொரோனாப் பெருந்தொற்றுச் சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு  கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு வேந்தர் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக இந்தப் பட்டமளிப்பு விழாவில் பட்டங்களும், பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமையை உறுதி செய்வார்.  
 
பட்டமளிப்பு விழாவை யாழ். பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமை தாங்கி,  பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், பட்டப்பின் தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கியமையை உறுதிசெய்து பட்டதாரிகளை கௌரவிப்பதற்கு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.
 
உயர் பட்டப் படிப்புகள் பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், விவசாய பீடம், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம்,  மருத்துவ பீடம், தொழில் நுட்ப பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகத்தை)ச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.  

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 238 பட்டப்பின் தகைமை பெற்றவர் களுக்கும், 1, 795 உள்வாரி மாணவர்களுக்கும்,   585 தொலைக்கல்வி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
 
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தில் இருந்து 238 பேர் பட்டப்பின் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை 04 பேரும், முதுமெய்யியல்மாணிப் பட்டத்தை 16 பேரும், சைவ சித்தாந்தத்தில் முதுகலை மாணிப் பட்டத்தை 31 பேரும், முது வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 47 பேரும்,  சூழல் முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை 14 பேரும், முதுகல்வியியல்மாணிப் பட்டத்தை 101 பேரும், பண்பாட்டியலில் முதுகலைமாணிப் பட்டத்தை 10 பேரும், முகாமைத்துவத்தில் பட்டப் பின் தகைமைச் சான்றிதழை 02 பேரும், நூலகத் தகவல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் தகைமைச் சான்றிதழை 13 பேரும் பெறுகின்றனர்.

உள்வாரியாக, மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 131 பேர் மருத்துவமாணி சத்திர சிகிச்சை மாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 65 பேர் விவசாயத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 55 பேர் பொறியியல் விஞ்ஞான மாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

கலைப்பீடத்தைச் சேர்ந்த 52 பேர் சட்டமாணிப் பட்டத்தையும், 309 பேர்  சிறப்புக் கலைமாணி பட்டத்தையும், 15 பேர் மொழிபெயர்ப்புக் கற்கையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் ,02 பேர்   கலைமாணி பொதுப் பட்டத்தையு ம் பெறவுள்ளனர்.  மேலும், 63 பேர் நுண்கலைமாணி (நடனம் - பரதம் ) பட்டத்தையும், 56 பேர் நுண்கலைமாணி (சங்கீதம்) பட்டத்தையும், 20 பேர் நுண்கலைமாணி ( சித்;திரமும், வடிவமைப்பும்) பட்டத்தையும் பெறுகின்றனர்.  இவர்களுடன், சித்த மருத்துவ அலகைச் சேர்ந்த 38 பேர் சித்த வைத்திய சத்திரசிகிச்சைமாணி பட்டத்தையும் பெறுகின்றனர்.

இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 24 பேர் தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணி பட்டத்தையும், 15 பேர் மருந்தகவியல்மாணி சிறப்புப் பட்டத்தையும், 18 பேர் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.
 
விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 174 பேர் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், ஒருவர் மீன்பிடியியல் விஞ்ஞானத்தில் தகைமைச் சான்றிதழையும் பெறுகின்றனர்.

இவர்களுடன் , முகாமைத்துவ கற்கைகள்  மற்றும்  வணிக பீடத்தில் இருந்து வியாபார நிருவாக மாணி (சிறப்பு) பட்டத்தை 246 பேரும், வியாபார நிருவாக மாணிப் பட்டத்தை 08 பேரும், வியாபார நிருவாக மாணி பொதுப் பட்டத்தை 12 பேரும், வணிகமாணிப் பட்டத்தை 72 பேரும் பெறுகின்றனர்.
அத்துடன், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 88 பேர் பொறியியல் தொழில்நுட்பமாணி (சிறப்பு) பட்டத்தையும், 77 பேர்  உயிர்முறைமைகள் தொழில் நுட்பமாணி (சிறப்புப்) பட்டத்தையும் பெறுகின்றனர்.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாக (தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழக) த்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 27 பேர் தகவல், தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டத்தையும், 06 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 06 பேர் கணினி விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், 41 பேர் தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், 23 பேர் கணினி மற்றும் பிரயோக கணிதம் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும், 13 பேர் சூழல் விஞ்ஞானத்தில் விஞ்ஞானமாணி பொதுப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர். மேலும், அதன் வியாபார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 34 பேர் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 80 பேர் வியாபார முகாமைத்துவமாணி (சிறப்பு) பட்டத்தையும், 25 பேர் வியாபார முகாமைத்துவமாணி (பொது) பட்டத்தையும் பெறுகின்றனர்.  
இவர்களுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வெளியேறிய 146 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், 63 பேர் வணிகமாணிப் பட்டத்தையும், 370 பேர் கலைமாணிப் பட்டத்தையும், ஒருவர்  சங்கீதமாணிப் பட்டத்தையும், 05 பேர் நடனமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றனர்.  

• நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக, சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கமைய பட்டமளிப்பு நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

• பட்டமளிப்பு விழாவுக்கு வழமை போன்று பட்டம் பெறும் மாணவர்களுடன், பெற்றோரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். பட்டம் பெறுகின்ற மாணவர்கள், மற்றும் அழைப்பின் பேரில் வருகை தர இருக்கின்றவர்கள்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு விநயமாகக் கேட்டு கொள்கின்றோம்.

• விழா மண்டபம் மற்றும் ஒன்று கூடல் மையத்தில் பட்டதாரிகளும் அவர்களுடன் அழைக்கப்பட்ட பெற்றோர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் வீடியோ மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

• பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் எமது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் இணையத்தளம் வாயிலாகவும், முகப் புத்தகம், யூ ரியூப் சனல்களின் ஊடாகவும் நேரலையாக ஒளி பரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

பட்டமளிப்பு விழா அரங்குக்கு வெளியிலும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு, சமூக இடைவெளியைப் பேணுவதன் மூலம் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகம் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post