யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! - Yarl Voice யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! - Yarl Voice

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!




யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) இன்று புதன்கிழமை காலை, கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. 

யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 

இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நடைமுறைகள் மற்றும் மாணவர் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். 

இந்நிகழ்வில் பீடாதிபதிகள், முன்னாள் விளையாட்டு விஞ்ஞானத் துறை இணைப்பாளர்கள், உடற்கல்வி அலகின் பணிப்பாளர் மற்றும் பயிற்றுநர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

மிக நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்த உடற்கல்வியியல் பட்டப்படிப்பு தற்போது யாழ்ப்பாணத்தில் கை கூடி வந்திருக்கிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2020 / 2021 ஆம் கல்வி ஆண்டுக்காக யாழ். பல்கலைக்கழக  உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு பட்டக் கற்கை நெறிக்காக விண்ணப்பித்து, பல்கலைக்கழகத்துக்கான அடிப்படை உள்நுழைவுத் தகைமையான 3 எஸ் சித்திகளைப் பெற்றிருப்பதுடன், அனுமதிக்கான சிறப்பு உளச்சார்பு - செயன்முறைத் தேர்வில் 50 புள்ளிகளுக்குக் குறையாமலும் பெற்ற மாணவர்களின் இசற் புள்ளி அடிப்படையில் சுமார் 50 மாணவர்கள் இந்தப் பட்டப் படிப்புக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் விளையாட்டுத் துறையிலான ஈடுபாடும், சாதனைகளும் அனுமதிக்கான மேலதிக புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுகின்றவர்களையும் பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்கி அவர்களுக்கும் தகைமை ஒன்றை வழங்க வேண்டும் என்ற முனைப்பு முதன் முதலாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை விட ஏனைய சில பல்கலைக்கழகங்கள் விளையாட்டுத் துறையிலும், உடற்கல்வி விஞ்ஞானத்திலும் பட்டங்களை வழங்குகின்ற போதிலும், முதன் முதலாக உடற்கல்வியியலில் இரண்டு வருட டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்த பெருமை யாழ். பல்கலையையே சாரும்.

1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி, அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளையினால் உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தக் கற்கை நெறியின் முதல் மூன்று அணிகளிலும் பயின்றவர்களே இன்று பெரும்பாலான பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகவும், கல்வி வலயங்களில் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி சேவை ஆலோசகர்களாகவும் கடமையாற்றி வருவதோடு, பல இடங்களில் விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர்களாகவும் விளங்குகின்றனர்.

ஆரம்பத்திலேயே உடற்கல்விக் கற்கைநெறியை பட்டமாக வழங்குவதற்கான முயற்சிகளில் யாழ். பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்தாலும், நிர்வாக ரீதியாக அந்தத் துறை எதிர்கொண்ட சவால்களை மேவி அது உடற்கல்வி  விஞ்ஞான மாணிப் பட்டமாக அங்கீகாரம் பெறுவதற்கு கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகியிருக்கின்றன.

இரண்டு வருட உடற்கல்வி டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களின் முதலிரண்டு அணிகளும் வெளியேறிய காலப்பகுதியில், அதன் தொடர்ச்சியாக மூன்றாவது வருடத்தைத் தொடர்ந்து உயர் டிப்ளோமா அல்லது உடற்கல்வி மாணிப் பட்டத்தை வழங்குவதற்கு பல்கலைக்கழகத்தினால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆரம்பத்தில் முகாமைத்துவ பீடத்தின் கீழும், அதன் பின் மருத்துவ பீடத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்ட உடற்கல்விக் கற்கை அலகை விஞ்ஞான பீடத்தின் கீழ் கொண்டு வந்து கற்கை நெறி அங்கீகாரத்தைப் பெறுவதில் பெரும் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன.

அதன்பின் அதனை கலைப் பீடத்தின் கீழ் கொண்டு வருவதற்கேற்ற வகையில் பாடத்திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சியும் கைகூடவில்லை. 

அதன் பின் - தற்போதைய துணைவேந்தர் பதவியேற்ற பின்னர் அவரால் தயாரிக்கப்பட்டு முன்மொழியப்பட்ட பாடத் திட்டமும், கலைத் திட்டமும், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு இதன் பாடத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைகிறது. ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது, பயனுறுதி மிக்கதாக ஆரம்பக் கல்வி உடற்கல்விச் செயற்பாடுகள், பாடசாலைகளில் விளையாட்டு – உடற்கல்வி பயிற்றல் உட்பட பல சர்வதேச விளையாட்டு விஞ்ஞானக் கற்கைநெறிகளை ஒத்த விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், எங்குமில்லாதவாறு பாரம்பரிய விளையாட்டுகளைப் பயில்வதற்கும், பயிற்றுவிப்பதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கற்கைநெறி ஆங்கில மூலத்தில் நடாத்தப்படவிருப்பதனால், இதன் பட்டதாரிகள் உலக ஒழுங்குக் கேற்றவாறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில்  சர்வதேசத் தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தயார்படுத்தப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post