அத்துக்கோரள எம்.பி. தாக்குதல் காயங்களாலேயே உயிரிழந்தார் - சட்ட வைத்திய அதிகாரி - Yarl Voice அத்துக்கோரள எம்.பி. தாக்குதல் காயங்களாலேயே உயிரிழந்தார் - சட்ட வைத்திய அதிகாரி - Yarl Voice

அத்துக்கோரள எம்.பி. தாக்குதல் காயங்களாலேயே உயிரிழந்தார் - சட்ட வைத்திய அதிகாரி




மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து எம்.பி கட்டிடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். பின்னர் பொதுமக்கள் கட்டிடத்தை சுற்றி வளைத்ததால் அவர் தனது துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் மரணம் தொடர்பில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி (ஜேஎம்ஓ) நடத்திய பிரேதப் பரிசோதனையில் அவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதலுக்கு உள்ளானதன் காரணமாக பாரியளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எம்.பி.யின் மரணம் பல காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் உள் இரத்தப்போக்கு காரணமாக இருந்தது. ஆனால் அவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இல்லை" என்று லங்காதீப செய்தித்தாள் அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது அவருடன் இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் ரவை ஒன்று காணப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியும் கடுமையாகத் தாக்கப்பட்டு, மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, பலத்த காயங்களுக்கு ஆளானதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாறாக கடுமையான தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post