கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் - அரசுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை - Yarl Voice கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் - அரசுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை - Yarl Voice

கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் - அரசுக்குச் சுமந்திரன் எச்சரிக்கை



"மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசு, அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 'சர்வகட்சி ஒன்றிணைவு' என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இன்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழுச்சிப்  போராட்டங்களால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றியது. போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்தப்  போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில், ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையற்றவையாகவும், அமைதியானவையாகவும் காணப்பட்டன என்று சான்றிதழ் வழங்கியிருந்தார். ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தலைமை தாங்கியவர்களைத் தற்போது அரசு கைதுசெய்து வருகின்றது. 

நேற்றுக் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதியாவார். அவரைக் கைதுசெய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது" - என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post