ஈழத்தமிழர் விடயத்தில் இரட்டை வேடம் போட்டு சாந்தனை பழிதீர்த்தது இந்திய வல்லாதிக்கம்! யாழில் புகழேந்தி குற்றச்சாட்டு - Yarl Voice ஈழத்தமிழர் விடயத்தில் இரட்டை வேடம் போட்டு சாந்தனை பழிதீர்த்தது இந்திய வல்லாதிக்கம்! யாழில் புகழேந்தி குற்றச்சாட்டு - Yarl Voice

ஈழத்தமிழர் விடயத்தில் இரட்டை வேடம் போட்டு சாந்தனை பழிதீர்த்தது இந்திய வல்லாதிக்கம்! யாழில் புகழேந்தி குற்றச்சாட்டு




ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. ஈழத் தமிழர்களுக்காக இந்தியா நிற்காது. உதவியும் செய்யாது. சாந்தன் விவகாரத்தில்  கூட பழிவாங்கும் பழிதீர்க்கும் எண்ணமே இந்தியாவில் அதிகம் இருக்கிறது.

இவ்வாறு சாந்தன் வழக்கு சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது..

ராஜீவ்காந்தி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் சாந்தன் மீளவும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். 

எனினும் சிறிலங்காவிற்கு அவரை மீள அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தாமதமாகியிருந்த நிலையில் மீளவும் வழக்கு தொடுத்ததால் விடுதலை உறுதி செய்யப்பட்டு ஈழத்திற்கு அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்ட்டிருந்த நிலையில் திடிரென சாந்தன் உயிரிழந்தார்.  

இதனால் ஈழதேசத்திற்கு உயிரோடு வருவதற்கு காத்திருந்த சாந்தன் சடலமாகவே கொண்ட வரப்பட்டார். சாந்தன் என்னிடம் பேசுகிற போது தான் ஈழத்திற்கு சென்றால் தனக்கு மக்கள் எப்படி எல்லாம் வரவேற்பு கொடுப்பார்கள் என்று வந்து பாருங்கள் என சொல்லியிருந்தார்.

ஆனால் உயிர் இல்லாமல் அவர் கொண்டு வரப்பட்ட போது வீதிகள் எங்கும் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர். அவர் இறந்தாலும் கூட அவர் கொண்ட கொள்கையையும் அவரையும் மக்கள் எந்தளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதை காணக் கூடியதாக இருந்தது.

இந்தநாட்டிற்கு வரவேண்டும் என்றும் தனது தாயாரை பார்க்க  வேண்டுமென்பதுடன் தாயாரின் கையால் ஒருபிடி சோறு சாப்பிட வேண்டும் என்பது தான் சாந்தனின் இறுதி ஆசையாக இருந்தது. 

சாந்தனுடன் விடுவிக்கப்பட்ட மற்றைய மூவரும் இலங்கைக்கு வருவதற்கு அச்சப்பட்டு தாங்கள் விரும்புகிற நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளனர். உண்மையில் தற்போதுள்ள சிறப்பு முகாமில் அவர்களும் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டால் அவர்களுக்கும் பெரிய ஆபத்து ஊற.படும் அச்சம் உள்ளது.

ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள தமிழ் தேசிய கட்சிகள் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோருகிறேன்.

குறிப்பாக தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கும் அரசியல் கட்சிகளை இந்தியாவற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். அங்கு இந்த மூவர் மட்டுமல்லாது ஈழத்தைச் சேர்ந்த பலர் இருக்கிற போது இந்த சிறப்பு முகாமை பார்வையிட்டு இலங்கை இந்திய அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்.
 
அங்குள்ளவர்களின் விடுதலைக்கு உண்மையிலையே முயற்சி எடுங்கள். இனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.  உங்களால் இதனைச் செய்ய முடியும். அந்த முயற்சி திருவினையாக்கும்.

சிறையை விட கொடுமையானது அந்த சிறப்பு முகாம். அந்த சிறப்பு முகாம் என்பது மரண கொட்டகை போல தான் உள்ளது.  எனவே அங்குள்ள மூவரையும் காப்பாற்ற நீங்கள் அங்கு வாருங்கள் பேசுங்கள்.

 அவர்களது விடுதலைக்காக இங்குள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் எம்பிக்கள் இந்தியாவிலுள்ள தமிழ்தேசிய உணர்ஙாளர்கள் என அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் போராடுவோம்.

சிறையில் இருந்து வீடுவிக்கப்பட்டாலும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றவர்களை வெளியில் விடுவதற்கான முயற்சிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்திய மத்திய அரசு மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு கூட அக்கறை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியிலுள்ள திமுக என்றைக்குமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த்து என்று சொல்ல முடியாது. அதிலும் எதிராக தான் இருந்தது என்று சொல்லலாம். 

ஈழத்தில் போர் உச்ச கட்டத்தின் போது போராட்டத்தை நசுக்குவதற்காக அவங்களே போராட்டங்களை நடாத்தினாங்கள். திமுக நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்தி இருக்கலாம்.

 குறிப்பாக தமிழகத்திற்கு  பிரதமர் வருகிறார் என்றால் சிறப்பு முகம் மட்டுமல்ல ஏனைய முகாம்களில் இருந்தும் இலங்கைத் தமிழர் வெளியே வர முடியாது. அதிலும் கையெழுத்து போட வேண்டும் இல்லாவிட்டால் பழிவாங்கள்  நடவடிக்கை நடக்கும்.

இந்தியாவை பொறுத்தவரையில் அதிமுக திமுக என பிரதன இரண்டு  கட்சிகளும் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் அது தமிழர்களுடைய ஆட்சி அல்ல. எனவே நடந்தவை இருக்க இனிமேல் அப்படி நடக்காமல் இருக்கவே பார்க்க வேண்டும். அங்குள்ள சிறப்பு முகாம் எந்தளவிற்கு ஆபத்தானதோ அதே போல தான் அங்குள்ள அகதி முகாம்களும் ஆட்டு மாட்டு கொட்டில்களைவிட மிக மோசமாக இருக்கும்.

இதேவேளை இந்திய மத்திய அரசோ தமிழக அரசோ நினைத்திருந்தால் சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் அது நடெபெறாமல் போனதற்கும் சாந்தனின் உயிரிழப்பிற்கும் திமுக அரசிற்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. இதற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்தும் ஆராய்கிறோம்.

மேலும் ராஜீவ்காந்தி விவகாரத்தை வைத்து சாந்தன் உள்ளிட்டவர்களை இந்திய அரசாங்கம் பழிவாங்கியும் இருக்கலாம். பழி தீர்த்தும் இருக்கலாம். தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தவிர ஏனைய பலரிடமும் பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணமே இருந்தது.

குறிப்பாக ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுகிறது. அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என வெளியில் காட்டி கொண்டாலும் உண்மையிலையே ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இனியும் ஆதரவாக இருக்காது.

புலிகளை என்ற பெயரில் இலங்கை இந்திய தமிழர்களை ஒடுக்குவதை தான் இந்திய அரசு தொடர்ந்தும் செய்து வருகிறது.  ஈழத் தமிழர்களுக்காக இந்தியா ஒருபோதும் நிற்காது என்பதுடன் உதவி செய்யவும் மாட்டாது.
எனவே இந்த தமிழ் இனத்தையும் மக்களையும் மண்ணையும் காப்பதற்கு அனைவருமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post