கொரோனோ தொற்று தாக்கத்தை பொது மக்கள் அலட்சியப்படுத்தாமல் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
உலக நாடுகள் முழுவதும் கொரோனோ தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் தற்பொது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அரசாங்கமும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதே போல மக்களும் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் மிக மிக அவதானமாக அக்கறையுடன் செயற்பட வேண்டும். ஆகவே கொரோனோ தொற்றின் தாக்கத்தை அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயற்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது இந்த நோயின் தாக்கத்திற்கு பலர் உள்ளாகியிருக்கின்றனர். இதனால் நோயின் தாக்கம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனாலும் அதிலிருந்து விடுபடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே பொது மக்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்கின்ற அNது வேளையில் மக்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக உலகம் முழுவதும் பரவி வருகின்ற இந்த கொரோனோ தொற்று இலங்கையிலும் தற்போது பரவி வந்துள்ளது. ஆகவே இந்த நோய் தொடர்ந்தும் பரவினால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுமென்று வைத்தியர்களே கூறுகின்றனர். ஏனெனில் அதற்கான அடிப்படை வசதிகள் இல்லை என்று வைத்தியர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.
ஆகவே நோயின் தாக்கம் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும். அத்தோடு அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் செயற்பட வேண்டும். இவ்வாறு மக்கள் செயற்படுகின்ற அதே நேரத்தில் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கொரோனா தொற்று சிகிச்சை முகாம்களை அமைக்கின்ற் விடயத்தில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. குறிப்பாக மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் அந்த முகாம்களை அல்லது நிலையங்களை அரசாங்கம் அமைத்து வருகிறது.
அதாவது யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் பகுதியில் கொரோனோ தொற்று சிகிச்சை முகாமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் செறிந்து வாழ்கின்ற இந்த பிரதேசங்களில் அவ்வாறு முகாம்களை அமைப்பது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஆகவே மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் இவ்வாறான நிலையங்களை அமைப்பதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment