யாழில் வெளிநாட்டவர்களின் வீடுகள் உடைத்து கொள்ளை - சந்தேக நபர் கைது, பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் வெளிநாட்டவர்களின் வீடுகள் உடைத்து கொள்ளை - சந்தேக நபர் கைது, பொருட்களும் மீட்பு - Yarl Voice

யாழில் வெளிநாட்டவர்களின் வீடுகள் உடைத்து கொள்ளை - சந்தேக நபர் கைது, பொருட்களும் மீட்பு

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்ற  குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில்  அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியுரிமை நாட்டுக்குத் திரும்பிவிடுவர்.

அதேபோல் அண்மையில் வந்து தங்கியிருந்துவிட்டு அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கும் கனடாவைச் சேர்ந்தவர்கள் கொழும்புக்கும் கடந்த மார்ச் மாதம் திரும்பிவிட்டனர்.
இந்த நிலையில் வீடுகளைப் பராமரிப்பதற்கு ஒருவர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று வியாழக்கிழமை அங்கு சென்ற பார்த்த போது இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டு பெறுமதியான வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்டவை திருட்டுப் போயிருந்தன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளை  வீடுகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து வீட்டிலிருந்த விலையுயர்ந்த இலத்திரனியல் பொருள்கள் மரத் தளபாடங்கள் போன்ற 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதி மதிக்கத்தக்க பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் நேற்று  யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவில் பராமரிப்பாளரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் திருட்டு இடம்பெற்ற வீடுகளுக்கு மிக அண்மையாக உள்ள வீட்டு உரிமையாளரைக் கைது செய்தனர்.

அவரது வீட்டில் திருடப்பட்ட பொருள்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. சம்பவத்தையடுத்து சந்தேக நபர் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி முனசிங்க தலைமையில் இந்தத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். விசாரணையின் பின் சந்தேக நபர் நீதிவான் முன்னிலையில் முட்படுத்தப்படவுள்ளார்கள் என்று பொலிஸார் கூறினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post