யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தினத்திலிருந்து இன்றுவரை பொலிசாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் வரை 16 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் 9 முறைப்பாடுகள் பொலிசாருக்கு எதிராகவும் அதிலும் கோப்பாய் சாவகச்சேரி வட்டுக்கோட்டை பருத்தித்துறை பொலிசாருக்கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அத்தோடு ராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஆனையிறவு தடை முகாம் ராணுவத்தினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும் ஏனைய முறைப்பாடுகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பில் அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பொதுமக்களால் பதியப்பட்டிருக்கின்றது.
பொலிஸாருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அந்தந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment