
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், ஒருவர் உயிரிழந்ததோடு, 18பேர் காயமடைந்துள்ளதாக நாட்டின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துருக்கியின் கிழக்குப் பகுதிகளில் உள்ள கர்லிலோவா மாவட்டத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் காயமடைந்த அனைவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
24 மணி நேரத்திற்குள் இப்பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக துருக்கியின் கிழக்கு மாகாணமான பிங்கோலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிங்கோல் மலைகள் மற்றும் ஏராளமான பனிப்பாறை ஏரிகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் சமீபத்தில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
துருக்கியில் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment