பாடகி எஸ்.ஜானகி உடல் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள பாடகர்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், அவர் பற்றி வெளியான வதந்தி குறித்து கண்டனம்
வெளியிட்டுள்ளார்.
பாடகி ஜானகி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் உலாவிய நிலையில், இது உண்மையில்லை என ஜானகியின்
மகனான முரளி கிருஷ்ணா அறிவித்ததைத் தொடர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வதந்தி குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காணொளி ஒன்றில்
தெரிவிக்கையில், “காலையில் இருந்து சுமார் இருபது தொலைபேசி அழைப்புகள் எனக்கு
வந்துவிட்டன. ஜானகி அம்மா எப்படி இருக்கிறார் என்பது பற்றித்தான்
விசாரிக்கிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் எப்படியோ ஒருவர் ஜானகி அம்மா குறித்து வதந்தி பரப்பியுள்ளார்.
என்ன முட்டாள்தனமான விஷயம் இது? நான் அவருடன் பேசினேன். அவர் மிகவும் நலமுடன்
இருக்கிறார்.
இது போன்ற விடயங்களால் என்ன நடக்கும் என்றால், யாராவது ஒருவர் ஒரு கலைஞரை மிகவும்
மனப்பூர்வமாக விரும்பினால், அவர்களுக்கு இது மாரடைப்பை கொடுத்திருக்கலாம். சமூக
வலைத்தளங்களில் தயவுசெய்து நல்ல விடயங்களைப் பரப்புவதற்காக மட்டும்
பயன்படுத்துங்கள்.
ஜானகி அம்மா நீடூழி வாழட்டும். கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்” என்று
குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி (வயது 82)
ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு,
ஹிந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களுக்கு
மேல் பாடியுள்ளார் என்பதுடன் வயது மூப்பின் காரணமாக 2018ஆம் ஆண்டுடன் பாடல்கள்
பாடுவதை அவர் நிறுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment