தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் - சித்தார்த்தன் சுட்டிக்காட்டு - Yarl Voice தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் - சித்தார்த்தன் சுட்டிக்காட்டு - Yarl Voice

தமிழ்த் தேசிய கட்சிகளுக்குள் பிரச்சனை ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தும் - சித்தார்த்தன் சுட்டிக்காட்டு


தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் ஓரணியில் செயற்படாது விட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் மக்கள் தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளார்கள். அதனை ஏற்க வேண்டும்.
அரச தரப்பிற்கும் தமிழ்தேசிய தரப்பிற்கும் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். தேர்தல் முடிவுகளை வைத்து பசில் ராஜபக்ஷவும் அமைச்சர்களும் தமிழ் மக்கள் கணிசமான ஆதரவு தமக்கு தந்துள்ளார்கள் என கூறுகின்றார்கள். இது நல்ல அறிகுறி இல்லை.

சர்வதேச ரீதியில் இனப்படுகொலைக்கான நீதிஇ யுத்தக் குற்ற விசாரணை போன்ற விடயங்களை மேற்கொண்டு செல்வதற்கு முடியாத சூழல் உருவாகியுள்ளது. விசாரணை தேவை எனக்கூறும் போது மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது என்ற கருத்து அரசதரப்பால் முன்வைக்கப்படுகின்ற சூழல் உருவாகும்.

இவ்வாறான சூழல் உருவாகின்ற போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதே அடுத்த கட்ட தேவையும் நடவடிக்கையாகவும் உள்ளது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டு தமிழ்தேசிய பரப்பில் செயற்படுகின்ற கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது கட்டாயமான தேவை. ஆனால் ஏற்கனவே கட்சிகளுக்குள் பிரச்சினை உருவாகியுள்ளது. தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் பிரச்சினை என்பது தமிழ் தேசிய உணர்வாளர்களுக்குள் மனக்கஷ்டத்திற்குள்ளாகியிருக்கின்றது.

 ஏற்கனவே தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக கூட்டமைப்பு எனக் கூறிக்கொண்டு தனிநபர் அல்லது தனிக் கட்சி தனித்து முடிவெடுப்பது தனித்து தீர்மானம் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

ஒரு முடிவினை எடுப்பதானால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து கதைத்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும். கடந்தகாலங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்தமையே கூட்டமைப்பின் இன்றைய பின்னடைவுக்கு காரணம். இதனை முதலில் உணர வேண்டும். 

இனிவரும் காலத்திலாவது மக்களின் நிலையை உணர்ந்து கூட்டமைப்பை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் இத்தகைய பிழைகளை விடாது பங்காளிக் கட்சிகளுடன் புரிந்துணர்வுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுக்க வேண்டும்.

தேர்தலுக்கு பின்னரான தமிழ்தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளமையால் பாராளுமன்றம் சென்று எவ்வாறு ஒற்றுமையாக செயற்படுவார்கள் என்ற குழப்பம் பலரிடத்திலும் உருவாகியுள்ளது.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகாண வேண்டும். எமக்கு வாக்களிக்காது தேசிய உணர்விலிருந்து வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் தமது நலனை கருத்தில் எடுக்காது செயற்பட்டாலும் நீண்டகாலமாக தமிழ்தேசிய பரப்பில் செயற்பட்டு வரும் நாம் இனப்பிரச்சினை தீர்வுக்காக நியாயமாக செயற்படுவதற்கு ஒற்றுமையாக செயற்படத் தயாராகவுள்ளோம். 

ஏனைய தமிழ் தேசிய பரப்பில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளாது விட்டாலும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதே அடுத்த கட்ட தேவையாகும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post