ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் அமைதியைக் குழப்பப் போகின்றதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இந்த ஆட்சியாளர்களினால் தமிழ் மக்கள் மிகப் பெரும் ஆபத்தான கட்டத்திற்குத் தள்ளப்படப் போகின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.
யுhழ்ப்பாணம் மண்டைதீவில் பொது மக்களுக்குச் சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சியை தடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது..
நாடாளுமன்றம் தொடங்கப்பட்டு முதலாவது அராஐகத்தையும் ஆட்சியாளர்கள் தொடங்கியிருக்கின்றார்கள். இதே போன்று பலவற்றையும் இந்த ஆட்சியாளர்கள் தொடரத் தான் போகின்றார்கள்.
குறிப்பாக தனியார்களின் காணிகள் என்று தெரிந்தும் அதனைச் சுவீகரிப்பதற்காக ஆட்களை இங்கே அனுப்புகின்றார்கள்.
ஆனால் தனியார் காணிகளை சுவீகரிக்க மாட்டோம் என்று கடந்த அரசாங்கம் ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்திருந்தது. ஆயினும் அதனையும் மீறி தற்பொது ஆட்சிக்கு வந்துள்ள கோத்தபாய அரசாங்கம் இதனைச் செய்கின்றது.
இவ்வாறான வேலைகளை கோட்டபாய அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்குமே தெரியும். ஆகவே இந்த ஆட்சியாளர்கள் இதனைப் போல பலவிடயங்களையும் நிச்சயமாகத் தொடரத் தான் போகின்றார்கள். அதிலும் கடந்த நாடாளுமன்றினூடாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விடயங்கள் இப்போது மெது மெதுவாக தொடங்கப்படுகிறது.
இங்கு தமிழ் மக்களின் காணிகளை கடற்படைக்கு சுவீகரிப்பதற்கு மிக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது எங்களுடைய காணிகள் எங்களுக்கே வேண்டும். அதனை யாருக்கும் கொடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றும் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இனிவரும் காலங்களில் இந்த அமைதியைக் குழப்பப் போகின்றவர்கள் அரசாங்கத்தினர் தான் .அதில் எந்தவிதமான ஐமிச்சமுமில்லை. ஏனெனில் அவர்களது செயற்பாடுகள் அவ்வாறானதாகவே இருக்கின்றது.
தற்போது நாடாளுமன்றத்தில் கூட சும்மா ஏதும் பேசினாலே அதற்காக கிளர்ந்தெழுகின்றார்கள். நாடு முழுவதுமே தங்களுடையது தான் என்பது போல இப்போது சொல்கின்றார்கள். அதுவும் சிங்களவர்களுக்கு தான் சொந்தம் என்பது போல அவர்கள் தங்களுடைய நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள்.
ஆகையினால் நாங்கள் மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிப் போகப் போகின்றோம். நிம்மதியற்ற வாழ்க்கைக்குப் போகப் போகின்றோம். இவை எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது.
மேலும் இது தனியார் காணிகள். ஆவர்களுடைய காணிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். அதனை சுவீகரிக்க கூடாது என இவை எல்லாம் அரசாங்கத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனர் அதனை விடுத்து சுவீகரிக்க முயலக் கூடாது.
எனவே காணி உரிமையாளர்களிடம் அந்தக் காணிகளை உடனடியாக கையளித்துவிட்டு வேறு இடங்களுக்குச் செல்வது தான் அரசாங்கத்திற்கு புத்திசாலித்தனமாக அமையுமென்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.
Post a Comment